Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 34 - சரோஜா ராமமூர்த்தி
2.34. தொழிலும் கடமையும்
"பார்த்தா ! மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. பெற்றிராத பேறுமில்லை: எனினும், நான் தொழிலிலே தான் இயங்குகிறேன், ஆதலால் எப் போதும் பற்று நீங்கிச் செய்யத்தக்க தொழிலைச் செய்து கொண்டிரு. பற்றில்லாடல் தொழில் செய்து கொண் டிருக்கும் மனிதன் பரம் பொருளை எய்துகிறான்."
கீதையின் இந்த அரும்பெரும் உரை சுவாமி நாதனுக்கு மனப் பாடம். சுமார் இருபது. இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்பு ஸ்ரீதரனின் வீட்டை அடைந்த அவர் தம்முடன் பிரமாதமான மூட்டை முடிச்சுக்கள் ஒன்றும் கொண்டு வரவில்லை. பிரம்பால் ஆன பெட்டி ஒன்றில் மாற்றிக் கட்டுவதற்காக வேட்டி இரண்டும் துண்டுகள் இரண்டுமே இருந்தன. பழனி ஆண்டவன் திரு நீறு கமகமவென்று ஒரு பொட்டலத்தில் மணம் வீசிக் கொண்டு இருந்தது. சிறிய வால்மீகி ராமாயண புத்தகம் ஒன்றும், பகவத் கீதை மொழி பெயர்ப்பு ஒன்றும் இருந்தன. அப்பொழுது அவருக்கு வெள்ளெழுத்து ஆரம்பமாகி விட்டதால் வெள்ளெழுத்துக் கண்ணாடியும் வைத்திருந்தார்.
அன்று அவர் தனியாகத்தான் வந்தார். இன்றும் தனியாகத்தான் இருக்கிறார். நாளை தனியாகத்தான் போகப் போகிறார். ஸ்ரீதரன் தம் இளம் மனைவியுடன் இன்பமாக வாழ்ந்த சொற்ப காலத்தைப் பார்த்துப் பிரும்மானந்தம் கொண்டவர் அவர். கணவன் மனைவி முப்பது வருடங்கள் இருந்து வாழ்ந்து காண வேண்டிய மன ஒற்றுமையை, அன்பை அவர்களிடம் மிகக் குறுகிய காலத்தில் கண்டவர். ராதா சிறு பெண்ணாக மிகச் சிறியவளாக பாவாடை கட்டுவதிலிருந்து படுக்கை போடு வது வரை அவர் துணையால், உழைப்பால் வளர்ந்தவள். ஜெயஸ்ரீக்குப் பால் புகட்டியதே அவர் தான். அவளும் பெரியவளாக வளர்ந்து விட்டாள். தாயைப் போன்ற குணங்களும், தந்தையைப் போன்ற கல்வி அறிவும் அவளுக்கு ஏற்பட்டு வருவதை மிக மகிழ்ச்சி யுடன் பார்த்தவர் கிழவர். இந்த மனிதர் தனக்கென்று அந்த வீட்டில் ஒரு விதமான உரிமையையும் ஸ்தாபித்துக் கொண்டவர் அல்ல.
அவர் வந்து முதல் மாதம் முடிந்ததும், டாக்டர் ஸ்ரீதரன் அவரிடம் முப்பது ரூபாய்களை மாதச் சம்பளம் என்று சொல்லிக் கொடுக்கப் போனார்.