Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 35 - சரோஜா ராமமூர்த்தி
2.35. இருளுக்குப் பின் ஒளி
உள்ளத்துக்கும் வைத்தியம் அவசியம் என்று சுவாமிநாதன் ராதாவிடம் கூறினார் அல்லவா? கடந்த சில மாதங்களாக, அவர் தம் மனத்தைப் புற விஷயங்களில் அதிகம் செலுத்தாமலேயே இருந்து வந்தார். கடலின் அலைகளைப் போல உலகத்தில் நடக்கும் விஷயங்களுக்கு ஓய்ச்சல் ஒழிவு இருப்பதில்லை. பிறப்பு, இறப்பு, பருவங்கள். பண்டிகைகள், உதயம். அஸ்தமனம் யாவும் இந்த உலகில் நடப்பவை. யார் இருந்தாலும் இல்லாவிடினும் அவற்றிற்கு அதைப்பற்றிக் கவலை கிடையாது. தம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இருக்கும். சுவாமிநாதன். சதா ராம தாயத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். தாரக மந்திரமாகிய அந்த நாம அவருக்கு உடல் வலிமையை அளிக்காவிடினும், உள்ளத்துக்கு ஒளியும் தைரியமும் அளித்து வந்தது. உட்காரும் போதும் நிற்கும் போதும், நடக்கும் போதும் "ஹரே! ராமா!" என்று அழைத்து ஆறுதல் அடைந்தார். உலகில் இருப்பவர்கள் யாவரினும் இனியனாகிய ஒருவன் அவர் “ராமா!" என்று அழைத்தவுடன் தம் அருகில் வந்து நின்று 'ஏன்?' என்று இதமாகக் கேட்பது போன்ற அமைதியை அவர் உள்ளம் அடைந்தது. அதனால் தான் மூர்த்தியைப் பற்றி அவர் கேள்விப் பட்டதும் அந்த உள்ளம் அதிகமாகத் துயர் அடைய வில்லை. 'ஹே! ராமா! இதுவும் உன் செயல்தான் அப்பா' என்று ஒரு வார்த்தையில் உள்ளத்துக்கு ஆறுதல் தேடித் தந்தார். இருந்தாலும் உலக பந்தங்களிலிருந்து சாமானியமாக மனம் விடுதலை அடைவதில்லை. அந்தச் செய்தி அவர் உடல் நலத்தை வெகுவாகப் பாதித்து விட்டது. சில தினங்கள் வரையில் உட்காரும் சக்தியைப் பெற்றிருந்தவர் அந்தச் சக்தியையும் இழந்து விட்டார்.
அதிகாலையில் எழுந்து பிறருக்குச் சிரமம் தராமல் தன் வேலைகளைத் தானே செய்து வந்த சுவாமிநாதன் அன்று விடிந்ததிலிருந்து தம் படுக்கையை விட்டு எழவே இல்லை. காலைக் கடன்களை முடித்துக் கொண்டு அவரைப் பார்க்க வந்த ஸ்ரீதரன் நொடியில் விஷயத்தைப் புரிந்து கொண்டார். சுவாமிநாதன் இனி அதிக நேரம் இருக்க மாட்டார் என்பது தெரிந்து போயிற்று.
மெல்லக் கண்களைத் திறந்து தன்னைப் பார்க்கும் அவரைப் பார்த்து, ”உங்களுக்கு என்ன வேண்டும் ஏதாவது சாப்பிடுகிறீர்களா?" என்று விசாரித்தார் ஸ்ரீதரன்.
”வேண்டாம் வேண்டியதை சாப்பிட்டு விட்டேன்..." ஸ்ரீதரன் அவர் அருகில் தம் நாற்காலியை