இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.
”உங்கள் ஒன்று விட்ட தங்கைக்குத் தந்தி அடிக்கவா? உங்கள் பணத்தை அவர்களுக்கு அனுப்பி விடுகிறேன்..."
சுவாமிநாதன் மிகுந்த வேதனையுடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார்.
”அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ராதாவைக் கூப்பிடுங்கள்..." திணறிக் கொண்டே பேசினார் அவர்.
ராதா ஏதோ குற்றம் புரிந்தவளைப் போல அவர் அருகில் வந்து உட்கார்ந்தாள். நடுங்கும் தன் கரங்களால் அவள் மிருதுவான கைகளைச் சேர்த்துப் பிடித்துக் கொண்டார் சுவாமிநாதன்.
"அம்மா! இனிமேல் நீ நன்றாக இருப்பாய். உலகத்தில் இன்பமும் துன்பமும் மாறி மாறித்தான் வரும். இருளுக்கு அப்புறம் ஒளிதானே? நீ உன் புருஷனுடன் ஆனந்தமாக இருக்கும் போது நான் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லை. அவன் இனிமேல் திருந்தி விடுவான். எல்லோரும் சந்தோஷமாக இருப்பீர்கள் ....."
சுவாமிநாதன் அதற்கு மேல் பேசவில்லை . அவர் வாய் உலக விஷயங்களைப் பேச மறந்தது போல் அசையாமல் இருந்தது. அவர் முகத்தில் துயரம், துன்பம் ஒன்றும் இல்லை. அசாதாரணமான ஓர் அமைதி. புன்னகை நிரம்பி இருந்தது. சுவாமிநாதன் தம் கடமை களைச் சரிவரச் செய்த நிம்மதியில் அவர் இடையறாது துதித்து வந்த ஸ்ரீராமனது திருவடிகளை அடைந்து விட்டார்.
டாக்டர் ஸ்ரீதரனின் கண்களிலிருந்து அருவி போலக் கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. தேம்பியும் புலம்பியும் தன் சகோதரியை அணைத்தவாறு டாக்டர் வெளியே சென்றார்.
--------------
தொடரும்...