ஏமாற்றினீர்களே? இப்போது மட்டும் எந்தச் செடியிலிருந்து முளைத்தது?" என்றாள்.
மாலன் பணம் அனுப்பியதாகச் சொன்னேன். அயர்ந்து நின்றாள். "அப்படியானால் கற்பகத்துக்கு ஏதோ நல்ல காலம் வரப் போகிறது. வரட்டும். நல்ல பெண் நல்ல படியே வாழ’ணும்" என்று உளமார வாழ்த்தி நின்றாள்.
அன்று அவளை ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால் மாதவிக்கு அணிவன எல்லாம் அணிவித்து, தானும் புதிய சேலை உடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டாம் குழந்தைக்குத் தாய் ஆகும் நிலையில் இருந்தபடியால், வாலாசாவுக்கு அனுப்பும்படியாகப் பெற்றோர் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அவர்களுடைய விருப்பப்படியே அன்று பகல் ரயிலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து, கையில் கொடுத்தனுப்பப் பணம் இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் தபால்காரர் மணியார்டரோடு வந்து நின்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக மகிழ்ந்தேன். மனைவியோ அதில் கற்பகத்தின் நல்வாழ்வையும் கண்டு மகிழ்ந்தாள்.
அவள் மகிழ்ந்ததற்கு ஏற்பவே மாலன் மனம் திருந்திக் கடிதம் எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் போவதற்கு முன் அந்தக் கடிதம் வந்திருந்தால், அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு மிகுதியாகியிருக்கும்.
"நெல் ஆலையை என்னால் தனியே நடத்தமுடியாது என்று தெரிந்து கொண்டேன். அந்த லாரிக்கார நண்பன் முன்வந்து பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இப்போது கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது. இருந்தாலும் பொறுப்பு அவருடையதே. நான் சம்பளக்காரன் போல் இருந்து அவர் சொன்னபடியே உழைக்கிறேன். மாதம் நூற்றைம்பது ரூபாய் குடும்பச் செலவுக்கும் ஐம்பது ரூபாய் பழைய கடன் அடைப்புக்கும் என்று கொடுக்கிறார். அவர் கிழித்த கோட்டை விட்டு விலகாமல் நடக்கிறேன். அதனால் கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு நன்மையாகச் சில மாறுதல்களும் ஏற்பட்டுவிட்டன. மற்றொரு நெல் ஆலைக்காரரின் போட்டி வேகம் தணிந்துவிட்டது. லாரிக்கார நண்பரோடு பகைத்துக் கொள்ள அவரால் முடியாது. ஆகவே வீம்புக்குச் செய்யும் போட்டியை விட்டுவிட்டார். நானும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் கவனம் செலுத்துகிறேன். மாமனாரும் கடைசியில் இரண்டாயிர ரூபாய் தருவதற்கு உடன்பட்டுச் சொல்லியனுப்பினார். நீ முதலில் எழுதிய கடிதத்தை நினைவில்