"சரி போதும்."
நான் உட்கார முயன்றேன்.
"நீ ஏன் இங்கே உட்காரணும். என் அழகைப் பார்க்கணுமா? வேண்டா, வேண்டா, போ" என்று தடுத்தான்.
"அப்படி எல்லாம் சொல்லாதே. உன் அழகையும் பார்த்தேன். உன் துன்பத்தையும் பார்க்கிறேன். என்ன செய்வது?" என்று உட்கார்ந்தேன்.
"வேலு!" என்று தரையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
"தண்ணீர் குடிக்கவில்லையே" என்றேன்.
"உன் எதிரில் இந்தக் கைகளை நீட்டித் தண்ணீர் எடுப்பதற்கு மனம் வரவில்லை, அப்பா. நான் செய்த வினை அப்பா, வினை!"
"புதிய இடத்தில் அச்சப்பட்டுத் தயங்குவதைப்போல் இங்கே இருக்காதே. நோய் வந்துவிட்டது. உன் அழகைப் பாழாக்கிவிட்டது. என்ன செய்வது? நான் பார்க்கிறேன் என்று இப்படித் தயங்கினால் இங்கே நீ வந்து பயன் என்ன? உன் உடம்புக்குத் தகுந்தபடி நடந்துகொள். கைகாலை நீட்டி வசதியாக இரு" என்றேன்.
"வசதியா? எனக்கு இன்னும் வசதி வேண்டுமா?" என்று இருமினான்.
அவன் இருமுவதைக் கேட்கத் துன்பமாக இருந்தது.
"மருந்து வாங்கி வருகிறேன். என்ன மருந்து, எதற்கு என்று சொன்னால்."
"மருந்தா? இனிமேல் ஒரே மருந்துதான் தேவை; சாவுக்கு மருந்து."