Flexi Classics தொடர்கதை - அகல் விளக்கு - 27 - மு. வரதராசனார்
எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு மணியார்டர் கொண்டு வந்து கையில் நீட்டினார். "நூறு ரூபாய்" என்றார்.
"எங்கிருந்து?" என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன்.
மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு ரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் ரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன்.
"அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை என்று நோன்பு கொண்டிருந்தேன். அதனால்தான் இதுவரையில் மறைவும் மவுனமும். பணம் சேர்த்துக் கவலை தீர்ந்துவிடவில்லை; மனம் திருந்திக் கவலை தீர்ந்து விட்டது. கடிதத்தில் விரிவு, அன்புள்ள, மாலன்" என்று எழுதியிருந்தான். அதில் கையெழுத்து இட்டுத் தபால்காரரிடம் கொடுத்தேன். அவர் கொடுத்த நூறு ரூபாயும் எண்ணி வாங்கும்போது என் மகள் மாதவி ஓடி வந்து, "அப்பா! அம்மா கூப்பிடுகிறாங்கோ" என்றாள். அவளுடைய பாவாடையும் சொக்காயும் பளபள என்று மின்னுவதையும், அவளுடைய சின்ன நெற்றியில் செந்நிறத் திலகம் பட்டொளி பரப்புவதையும், வாயின் புன்சிரிப்பு என் உள்ளத்தை கொள்ளைக் கொள்வதையும் உணர்ந்தபடியே, "இந்தா! கண்ணு! இதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு" என்றேன். அவள் அதை எண்ணுவது போல் விரல்களால் புரட்டிக்கொண்டே நடந்தாள். அவளுடைய தலையின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்ததையும் தாழம்பூவும் மல்லிகையும் அதற்குத் தூய அழகு தந்து விளங்கியதையும் கண்டேன். "அம்மா! அம்மா! அப்பா ரொம்ப ரூபா கொடுத்தாங்கோ" என்று அவள் சொன்னது கேட்டது.
உடனே அங்கிருந்து என் மனைவி அந்த நோட்டுக்களுடன் விரைந்து வந்து பல்லெல்லாம் தெரிய என் எதிரே நின்று, "பணமே இல்லை, சம்பளம் வந்தால்தான் உண்டு என்று