"இங்கே யாரும் வரமாட்டார்கள். கட்டில் பிடித்துப் போட்டுவிட்டால் இங்கேயே இருக்கலாம்" என்றேன்.
"கட்டிலா? எனக்கா?" என்று என்னை நிமிர்ந்து பார்த்த போது என் கண்கள் அவனைப் பார்க்கக் கூசின. "ஒரு பழைய பாய் கொடு. அது போதும். நான் போன பிறகு அதைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடவேண்டும்" என்றான்.
உள்ளே சென்று, ஒரு நல்ல பாயும் மெல்லிய மெத்தையும் ஒரு தலையணையும் கொண்டு வந்தேன்.
"வேலு சொன்னால் கேள். விருந்தாளிக்குக் கொண்டு வருவதுபோல் நல்ல பாயும் மெத்தையும் கொண்டு வருகிறாயே. வேண்டாம்’பா. ஏதாவது கந்தல் கொடுபோதும்" என்றான்.
"என் மனம் கேட்காது. பேசாமல் இரு. மறுக்காதே. என் கடமை இது" என்று வற்புறுத்திப் பாய்மேல் மெத்தை பரப்பி உட்காரச் சொன்னேன். அவன் மெத்தையை நீக்கி விட்டுப் பாய்மேல் உட்கார்ந்தான். "குடிக்கத் தண்ணீர் வேண்டும்" என்றான்.
தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவன் இரண்டு கைகளாலும் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவனுடைய கைவிரல்களைப் பார்த்து விட்டேன். என்னைக் கண்டதும் அவன் சொரிவதை நிறுத்தி விட்டுக் கைகளை மடக்கிக் கொண்டான். தண்ணீரை நீட்டினேன். "வை கீழே. நான் எடுத்துக் குடிப்பேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தால் முன்னே போய்ப்பார். அப்புறம் பேசலாம்" என்றான்.
"எனக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. உனக்கு வேண்டியதைச் சொல்."
"சாப்பாடு யார் சமைப்பது?"
"வேலைக்காரன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து கொடுப்பான்."