வைத்துக்கொண்டு நான் வேண்டா என்று சொல்லிவிட்டேன். ஆனால் கற்பகத்தை இங்கே அழைத்து வருவதற்காகப் பெருங்காஞ்சிக்கு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். ஊருக்கு வந்து நிலபுலங்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே வாழுமாறு மாமனார் எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. உன்னுடைய அறிவுரையும் எனக்கு வேண்டும். நான் இன்னும் பெருங்காஞ்சிக்கு போகவில்லை கற்பகத்தின் பிடிவாதமான வெறுப்புக்காக அஞ்சி நிற்கிறேன். உன்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணியிருக்கிறேன். நீதான் என் திருமணத்திற்கும் தொடக்கத்தில் உதவியாகக் கடிதம் எழுதியவன். எங்கள் இல்வாழ்க்கை இனிமேல்தான் செம்மையாகத் தொடங்க இருக்கிறது. இதற்கும் நீ முன்வந்து உதவி செய்யவேண்டுகிறேன். நீ வந்து சொன்னால் தான், அவள் பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து என்னை வரவேற்பாள். நீ மறுக்காமல் வரவேண்டும். அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ அங்கே வந்து உன்னை அழைத்து கொண்டு பெருங்காஞ்சிக்குப் போக எண்ணியிருக்கிறேன். வருவேன். மற்றவை நேரில். உன் அன்பன் மாலன்."
இந்தக் கடிதம் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாக்கியது. அதனால் அன்று பிற்பகல் நான் அலுவலகத்தில் வேலையும் அவ்வளவாகச் செய்யவில்லை. பெரிய விருந்து உண்டு மயங்கியவன்போல் பொழுதைப் போக்கிவிட்டு மணி நாலரை ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டேன். முன் வாயிலருகே வந்தபோது, "அய்யா சாமி" என்பதுபோல் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலே வந்தேன். "வேலு" என்பது போலவே இரண்டு முறை கேட்டது. யாரோ இந்தப் பெயருடையவன் ஒருவனை அழைக்கும் குரல், இதற்காக நம்மைப்போன்ற ஓர் அதிகாரி திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நகர்ந்தேன். மறுபடியும் அதே குரல் இரண்டு முறைகேட்கவே சிறிது திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தேன். "வேலய்யா! வேலு!" என்றதும் நின்றேன். மறுபடியும் நடந்தேன். "அய்யோ மறந்து விட்டாயா? கடவுளே மறந்து விட்டாயா? வேலு!" என்றதும் திகைத்து நின்றேன். சிறிது தொலைவில் ஒருவன் தொப்பென்று தரையில் விழுந்தது கண்டேன். எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த ஒருவர், "உங்களைப் பார்த்துத்தான் கூப்பிட்டுக் கொண்டே வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டார். யாரோ, பாவம்" என்றார். உற்றுப் பார்த்துக்கொண்டே விழுந்தவனை நோக்கி நடந்தேன். குப்புறவிழுந்திருக்கவே யார் என்று தெரியவில்லை. அப்போது அலுவலகத்து வேலையாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவனை நோக்கி, "யார் பார்" என்றேன். அவன் குனிந்து பார்த்து, "யாரோ நோயாளி" என்றான். அதற்குள் பத்துப் பதினைந்து பேர் அங்கே கூடிவிட்டார்கள். விழுந்தவனுடைய