Flexi Classics தொடர்கதை - அவள் விழித்திருந்தாள் - 10 - சரோஜா ராமமூர்த்தி
பட்டப்பாவுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு மாசங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூரணி உண்டாகி மசக்கையாகப் பிறந்த வீட்டுக்குப்போய் இருக்கிறாள். நர்மதா மட்டும் மரம் மாதிரி நிற்பது கங்கம்மாவுக்கு வேதனையை அளித்தது.
அன்று பொல்லென்று பொழுது விடியும் போதே நர்மதா கொல்லையில் கிணற்றங்கரையில் கல்லில் உட்கார்ந்திருந்தாள். கங்கம்மாவுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.
"உக்காந்தாச்சா?"
அவள் பேசாமல் இருந்தாள்.
''ஊருக்குப் போயிட்டு வந்தியே, எங்கேயாவது நல்ல டாக்டரிடம் காட்டி ஏதாவது வழி கேட்டுண்டு வரது தானே?"
பாலுவின் தலை அந்தக் காலை நேரத்தில் பக்கத்து வீட்டு வேலி வழியாக எட்டிப் பார்த்தது. அர்த்தத்தோடு புன்னகைத்தான். அவள் மேலும் பேசாமல் இருக்கவே கங்கம்மா பக்கெட்டை நக்கென்று வைத்தாள். ஆத்திரத்துடன் தண்ணீரை வாரி வாரி முகத்தில் அடித்துக் கொண்டாள்.
"பாக்கறதுக்கு உடம்புதான் தளதளன்னு நன்னா இருக்கு. அத்தனையும் மலட்டுச் சதை.."
பாலு வேலிக்கு மேல் தலையைத் தூக்கிப் பார்த்தான். பாவமாக இருந்தது. கண்களால் ஏதோ ஜாடை செய்தான் "வாயைத் திறந்து ஏதாவது சொல்லு" என்று அதற்கு அர்த்தமாக இருக்கலாம்.
கங்கம்மா உள்ளே போய்விட்டாள். நர்மதாவின் கண்கள் கலங்கியிருந்தன.
வேலியோரமாக வந்து நின்ற பாலு, "உங்க தம்பியைக் கேளுன்னு சொல்லேன், பயந்து சாகறியே” என்று வெடித்தான்.
அப்போதும் நர்மதா பேசாமல் இருக்கவே, "பொம்மனாட்டிகளுக்கு இருக்கிற நெஞ்சாழம்