வச்சேன்."
"நீ கேட்டதும் தப்பில்லே. நான் விட்டதும் தப்பில்லே தேசிகாமணி! எல்லாம் முறையாத்தான் நடந்திருக்கு. அஹமத் அலி பாய்க்கு விடலாம். உனக்கு விடப் படாதா?"
"கோவில் குளத்தை வெறுக்கிறவனைவிடக் கோவில் சிலைங்களையே பணங்குடுத்துத் திருடிக் கடத்தி அந்நிய நாட்டுக்கு விற்கிறவங்களே தேவலைன்னு பார்த்தாங்க போலிருக்கு! தவிரவும் பாய் சீமாவையருக்குப் பாட்டில், ஸெண்டு, ஃபாரின் சரக்குங்க, சமயத்திலே கைமாத்து எல்லாம் குடுக்கிறவரு வேற!"
"அதிருக்கட்டும்! உன்னோட படிப்பகத்துக் கூட்டத்திலே நீ ரவியோட கூட வந்திருக்கிற அந்தப் பெண்ணைப் பத்திச் சொல்றப் போ, ஏதோ 'என் எதிர்கால மருமகள்'னு சொன்னியாமே?"
"ஆமாம், சொன்னேன்! உள்ளதைச் சொல்றதுக்கு ஏனப்பா எல்லாரும் பயந்து பயந்து சாகறீங்க? கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அந்தப் பொண்ணைத் தவிர வேறே யாரையும் கட்டிக்கிடப் போறதில்லைன்னு தனியாப் பேசிக்கிட்டிருக்கிறப்பத் தம்பியே எங்கிட்டச் சொல்லிடிச்சு. அந்தப் பெண்ணோ தம்பி மேலேயும் நம்ம நாடு, நம்ம நாட்டுப் பழக்க வழக்கங்கள் எல்லாத்து மேலேயும் உயிரையே வச்சிருக்கு. மூடநம்பிக்கை, மூடப் பழக்க வழக்கங்களைக் கூட ஏன்னுகேக்காமே கடைப்பிடிக்க அது தயாராயிருக்கு. எங்க படிப்பகத்திலே எந்தக் கூட்டத்திலேயும் கடவுள் வாழ்த்து - வெங்காயம் அது இது எல்லாம் கிடையாது. அன்னைக்குக் கூட்டத்திலே திடீர்னு யாரும் எதிர்பாராமே அந்தப் பொண்ணு என்னா செஞ்சிச்சிது தெரியுமா விசுவேசுவரன்? பேச்சைத் தொடங்கறதுக்கு முன்னாடி தானே தன் குரலிலே ஏதோ ஒரு கணபதி ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துப்பிட்டுத் தான் தொடங்கிச்சு.
"எங்க இயக்க ஆளுங்க ரொம்பப் பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஆனா அது தமிழிலே பேசின அழகிலே அத்தினி பேரும் அதை மறந்திட்டானுவ. ரெண்டொரு விடாக்கண்டங்க மட்டும் கூட்டம் முடிஞ்சதுமே எங்கிட்ட வந்து கேட்டானுவ. 'அதுனோட நம்பிக்கைப்படி அது கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கு! நம்மையோ படிப்பகத்தையோ அது பாதிக்காது'ன்னு பதில் சொல்லி அவனுகளை அனுப்பிச்சேன். உங்க ஐயமார் குடும்பத்திலேயே கூட இத்தினி நறுவிசாப் பதவாகமா ஒரு படிச்ச பொண்ணு ரவிக்குப் பொருந்தறாப்பல கிடைக்க மாட்டாப்பா. அந்தப் பொண்ணு கமலிக்கு நிறம் மட்டுமில்லே. குணமும் தங்கந்தானப்பா... எனக்கு இதிலே ஒளிவு