Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 21 - நா. பார்த்தசாரதி
ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து வந்தவள் என்னும் போது வதந்திகளுக்கு ஒரு வரம்பே இருக்க வழியில்லை. ஒழுங்கும் நியாயமும் கூட இராது. வதந்திகளுக்கும் விவஸ்தை இராது. அந்த வதந்திகளைப் பரப்புகிறவர்களுக்கும் விவஸ்தை இராது. சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும் பிரமாதமான விஷயங்கள் சாதாரணப் படுத்தப்பட்டுக் கொச்சையாக்கப்படுவதும் அந்த வதந்திகளைப் பொறுத்தவரை மிகவும் சகஜம்.
ரவியும் கமலியும், ஊருக்கு வந்ததிலிருந்து இலைமறைகாயாக அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இறைமுடிமணியின் பகுத்தறிவுப் படிப்பகத்தில் நடந்த கமலியின் சொற்பொழிவும் அந்தச் சொற்பொழிவில் கமலியை அறிமுகப்படுத்திய அவர் 'விசுவேசுவர சர்மாவின் எதிர்கால மருமகள்' என்கிற குறிப்புடன் கமலியைப் பற்றிக் கூறியிருந்ததும் ரவியைக் கொண்டே அவளுக்கு மாலையணிவிக்கச் செய்ததும் இப்போது வதந்திகளை வளர்த்து மிகவும் அதிகப்படுத்தியிருந்தன.
சர்மாவிடமே பகுத்தறிவுப் படிப்பகச் சொற்பொழிவில் 'அவரது எதிர்கால மருமகள்!' என்று கமலியை இறைமுடிமணி அறிமுகப்படுத்தியது பற்றி இரண்டொருவர் விசாரித்திருந்தனர். ஒளிவு மறைவாகப் பேசுவதோ விஷயங்களைப் பூசி மெழுகுவதோ, ஆஷாடபூதித்தனமோ இறைமுடிமணிக்கு அறவே பிடிக்காதென்பது சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் வக்கீல் நோட்டீஸ்களைப் பற்றியும், இதைப் பற்றியும் இறைமுடிமணியிடமே நேரில் பேச வேண்டுமென்று எண்ணினார் அவர்.
கமலியையும் ரவியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு இறைமுடிமணியைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார் சர்மா.
முதலில் பலசரக்குக் கடைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே அவர் இல்லை. அவருடைய மருமகன் குருசாமிதான் இருந்தான். அவனே விவரமும் சொன்னான்.
"மாமா விறகுக் கடையிலே இருக்காக. அங்ஙனே போனாப் பார்க்கலாம்."