Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 22 - நா. பார்த்தசாரதி
பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை.
சர்மா புன்முறுவலோடு பிரசாதம் எடுத்துக் கொண்டார். கமலி கையிலிருந்த தட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அவர் பிரசாதம் எடுத்துக் கொண்ட காட்சியை ரவியால் அப்போது நம்பவே முடியாமல் இருந்தது.
"திருப்பணிக்குப் பணம் குடுத்து ரசீது வாங்கினேளா?"
"இதோ ரசீது வாங்கியிருகோம்பா" - ரவி கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுத்துக் கமலி பேருக்கு வாங்கியிருந்த ரசீதை எடுத்து அப்பாவிடம் நீட்டினான்.
கமலி மாடிக்குப் போனாள். அவளைப் பின் தொடர்ந்த ரவியை, "நீ கொஞ்சம் இரு... உங்கிட்டப் பேச வேண்டியதிருக்கு" - என்று அவன் காதருகே கூறினார் சர்மா.
"இதோ வந்துடறேன்ப்பா; ஒரு நிமிஷம்" என்று அவருக்கு மறுமொழி கூறிவிட்டு மாடிப்படியேறினான் ரவி.
*****
அந்த வினாடியில் சர்மாவின் மனநிலை துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஒரு பரிசுத்தமான பூரண ஞானியின் துணிச்சலுடனும், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வெறுப்பற்ற மகிழ்ச்சியுடனும் இருந்தார் அவர்.
மாடிக்குப் போன ரவியை எதிர்பார்த்துக் கையில் பஞ்சாங்கத்துடனும் பென்சில் பேப்பருடனும் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல் கீழேயே காத்திருந்தார் அவர்.
ஏதோ இனம் புரியாமல் ரவிக்கும் மனத்தில் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. அப்பா தன்னைக் கூப்பிட்டுக் கமலியைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னதும், கமலியின்