"ஏண்டா ஏற்கெனவே நீ அவரிட்டப் பேசி முடிவு பண்ணி வச்சாசா? என்னமோ தயாரா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரிச் சொல்றியே?"
"இல்லே... கேட்டா ஒத்துப்பார்னு பட்டது. அதான் சொன்னேன்."
"சரி! வா, போகலாம். அவரிட்டேயே நேரக் கேட்டுடுவோம்."
"நான் எதுக்குப்பா? நீங்க கேட்டாலே ஒத்துப்பார். நானும் அவசியம் உங்க கூட வந்தாகணும்னா வரேன்."
"சும்மா கூட வாயேன் போயிட்டு வரலாம். நீ ஒண்ணும் பேசவேண்டாம். கேட்கிறதெல்லாம் நானே அவரிட்டக் கேட்டுக்கறேன்."
கூட வருவதற்கு ரவி சற்றே சங்கோஜப்பட்டாற் போலத் தோன்றியது. ஆனாலும் தட்டிச் சொல்லாமல் புறப்பட்டான். அந்த விஷயத்தில் அப்பாவின் திடீர் முடிவும் அவர் காட்டிய அவசரமும் உண்டாக்கிய சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவனால் முற்றாக மீள முடியவில்லை. அதனால் தெருவில் நடந்து போகிற போது அப்பாவிடம் அவன் எதுவுமே பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தபடி இறங்கியதும் நிறைந்த தண்ணீர்க் குடத்தோடு ஒரு சுமங்கலி தெருவில் எதிர்ப்பட்டபோது, "சகுனம் ரொம்ப நன்னா ஆறது" என்றார் சர்மா.
வேணு மாமா வீட்டை அவர்கள் அடைந்த போது அவர் திண்ணையிலிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஒரு பெரிய பழுக்காத் தாம்பளம் நிறையப் பழம் - பூ வெற்றிலை பாக்கு - பச்சை ஏலக்காய்க் கொத்து எல்லாம் இருந்தன. வேணு மாமா அப்போது மிக மிக உற்சாகமாயிருந்தார்.
"வாங்கோ! என்னோட எஸ்டேட் மானேஜர் புதுசா வீடு கட்டிக் கிருகப் பிரவேசம் பண்றானாம். இப்பத்தான் வந்து அதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறான். ஏது... அப்பாவும் பிள்ளையுமா இப்படிச் சேர்ந்து வந்திருக்கேள்... ரவிக்கும் எவனாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கானா?"