"அதெல்லாம் ஒண்ணுமில்லே. கோவில் திருப்பணி டொனேஷன் விஷயம் நீங்க சொன்னபடி பண்ணியாச்சு ரவியே கூடப் போயிப் பணத்தைக் குடுத்துக் கமலி பேருக்கு ரசீதும் வாங்கிண்டு வந்துட்டான்."
"சபாஷ்! அப்புறம்?"
"சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா. இந்த ஊர்க்காராளும், மத்தவாளும் பண்ற புரளியைப் பார்த்துப் பார்த்து நேக்கே தைரியம் வந்தாச்சு... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓர் ஒத்தாசை செஞ்சாகணும். இது மாதிரி ஒத்தாசையைப் பண்ற துணிச்சல் இந்த ஊர்ல உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறத்துக்கில்லே."
"ஏதேது? பீடிகை ரொம்பப் பெரிசாப் போடறேளே? விஷயம் என்னன்னு முதல்லே சொல்லுங்கோ."
கூட்டி முழுங்கித் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னார் சர்மா.
இதைக் கேட்டு உடனே பதில் எதுவும் சொல்லாமல் சிறு குழந்தை போல் வயதுக்கு மீறின உற்சாகத்தோடு உள்ளே ஓடிய வேணு மாமா கைப்பிடி நிறையச் சர்க்கரையோடு திரும்ப ஓடிவந்து சர்மாவை வாய் திறக்கச் சொல்லிப் பிடிவாதம் பண்ணி அதைக் கட்டாயமாக அவர் வாயில் போட்டார். உற்சாகம் கரை புரண்டது வேணு மாமாவுக்கு.
"இப்பவே வசந்திக்குத் தந்தி கொடுத்தாகணும். நீர் கொஞ்சம் கூடக் கவலைப்படாதேயும், எப்போ கமலியை நான் தாரை வார்த்துக் குடுக்கணும்னு நீரே சொல்றீரோ அப்போ பெண்ணுக்குப் பிறந்த வீடு இதுதான். கல்யாணமும் இந்த வீட்டிலேயே தான் நடக்கணும். லக்கினப் பத்திரிகை, முகூர்த்தக்கால் எல்லாத்துக்கும் உடனே ஏற்பாடு பண்ணிடறேன்."
"உம்ம ஆத்துக்காரியை ஒரு வார்த்தை கேட்டுக்க வேண்டாமோ?"
"கேட்கணும்கிறதில்லே. 'வசந்தி மாதிரி இவளும் நம்ப பொண்தான். இவளை நாமதான் தாரைவார்த்துக் குடுக்கணும். புதுப் புடவையைக் கட்டிண்டு மணையிலே வந்து என்