(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டதும் அதன்பின் உடனே 'உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும், வருகிறாயா?' - என்று தன்னைத் தனியே அழைத்ததும் நல்ல அடையாளங்களாகப் பட்டன அவனுக்கு.

   

அப்பா கொஞ்சமும் தயக்கமின்றிக் கமலியின் கையிலிருந்து கோயில் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பெருந்தன்மையை அவளிடமே சொல்லி வியந்துவிட்டு, "இதுவே அம்மாவாயிருந்தா ஒரு ஸீன் கிரியேட் பண்ணியிருப்பா கமலி! என்னதான் இருந்தாலும் அப்பா அப்பாதான்" என்று கூறியபின் கீழே இறங்கித் தந்தையை சந்திக்க வந்தான் ரவி.

   

அவன் படியிறங்கத் தொடங்கியபோது, "உங்கள் அம்மாவும் இப்படி முகமலர்ச்சியோடு என் கையிலிருந்து பிரசாதம் வாங்குகிற நாள் ஒன்று வரும். அதையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று கமலி உற்சாகமாகப் பதில் சொல்லியது அவன் காதில் விழுந்தது.

   

"தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ப் பேசலாமா" என்று கேட்ட ரவிக்கு, "வேண்டாம்! இங்கே மூணாம் மனுஷா யார் இருக்கா இப்போ? திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம் வா" என்று பதில் சொல்லியபடி திண்ணைக்கு அவனை அழைத்துச் சென்றார் சர்மா.

   

அப்பாவின் கையில் பஞ்சாங்கமும் பேப்பர் பென்சிலும் இருப்பதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு உண்டாயிற்று ரவிக்கு. எதற்கும் அவரே விஷயத்தை முதலில் சொல்லட்டும் என்று சிறுவனாயிருந்தபோது அதிகாலையில் அவரிடம் படிப்பதற்காக அடக்க ஒடுக்கமாக அதே திண்ணையில் அதே இடத்தில் எப்படிப் பவ்யத்தோடு உட்காருவது வழக்கமோ அப்படியே இன்றும் இப்போதும் உட்கார்ந்தான் அவன்.

   

"ஏண்டா! உன் மனசிலே என்ன தான் இருக்கு? உனக்கு நான் என்ன பண்ணணும்கிறதை நீ முதல்லே எங்கிட்டச் சொல்லணுமே ஒழிய என்னை மூணாம் மனுஷன் மாதிரி நெனைச்சுண்டு மூணாம் மனுஷனா இருக்கிற தேசிகாமணி கிட்டவும், வேணு மாமா கிட்டவும் முதல்லே சொல்லி அப்புறம் அவா அதை எங் காதுலே போடற மாதிரி விடப்படாது. அது கொஞ்சம் கூட நன்னா இல்லே. இந்தச் சின்ன விஷயத்திலே நீ ஏன் இத்தனை இங்கிதம் இல்லாமே நடந்துக்கணும்னு தான் எனக்குப் புரியலே."

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.