கேட்டு எல்லாச் செலவுக்கும் வாங்கிக்கலாம்..."
"உளறாதேயும் சர்மா! எனக்கென்ன சிரமம் இதிலே? நான் இதைப் போலப் பத்துக் கல்யாணத்தைச் சொந்தமாக் கையிலேருந்து செலவழிச்சுப் பண்ணி வைப்பேன். அத்தனை சௌகரியத்தைப் பகவான் எனக்குக் கொடுத்திருக்கான்... எனக்கு இன்னும் ஒரு பொண்ணிருந்து அவளுக்குக் கல்யாணம் பண்ண நேர்ந்தா அதுக்கு நான் தானே கையிலேருந்து செலவழிக்கணும்?"
"அதுக்கில்லே! நீங்க தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. கமலி இதை ஒரு ப்ரஸ்டிஜ் இஷ்யூவா எடுத்துக்காமே இருக்கணும் பாருங்கோ. அதுனாலே நீங்க இதுக்காகன்னே அவகிட்ட இருக்கிற டிராவலர்ஸ் செக்ஸை மாத்திப் பணம் எடுத்துக்கிறதுதான் முறை" என்று அதுவரை பேசாமல் இருந்த ரவி மெல்லக் குறுக்கிட்டு விளக்கினான்.
"அப்பிடியா? பொண்ணுக்கு அப்பாவைக் கல்யாணத்துக்குச் செலவழிக்கக்கூடாதுன்னு சொல்ற முதல் மாப்பிள்ளையை இப்போதாண்டா பார்க்கிறேன், ரவி" என்று சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கூறினார் வேணு மாமா.
சர்மாவோ ரவியோ அப்போது வேணு மாமாவை எதிர்த்து எதுவும் பேசவில்லை. உடனே புறப்பட்டு வரச் சொல்லி பம்பாயிலிருக்கும் தன் மகள் வசந்திக்கு ஓர் அவசரத் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லி ரவியையே தபாலாபீசுக்குப் போகச் சொல்லி அப்போது அனுப்பினார் வேணு மாமா.
"கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையை வேலை வாங்கறேனேன்னு நினைச்சுக்காதே அப்பா! எப்போ சாஸ்திரோக்தமான கல்யாணம்னு முடிவாயாச்சோ அப்புறம் பொண் பிறந்தாத்திலே தான் வந்து இருக்கணும். கமலி இங்கே வந்து தங்கிக்கணும்னா அவளுக்குத் துணை வேணும். அதனாலே வசந்தி உடனே வர வேண்டியதாயிருக்கு. அவ இருந்தாத்தான் இந்தக் கல்யாணம் சோபிக்கும். அதுவும் இந்தக் கல்யாணத்துலே அவளுக்குக் கொள்ளை ஆசை."
தந்தியைக் கொடுத்துவிட்டு வரப் புறப்பட்டான் ரவி.