Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 20 - நா. பார்த்தசாரதி
தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.
இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு ஆச்சரியம் அடைந்தாள். இப்படி ஒரு நோட்டீஸ் ரிஜிஸ்தர் தபாலில் வருகிற அளவுக்கு எந்தப் பெரிய குற்றத்தையும் தான் செய்யவில்லையே என்பதுதான் அவளுடைய இந்த ஆச்சரியத்துக்குக் காரணமாய் இருந்தது. படித்து முடித்ததும் அவளே தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தை ரவியிடம் கொடுத்தாள்.
அவளுக்கு வந்திருந்த கடிதத்தைப் படித்ததனால் அதே போல ஒரு பதிவுத் தபாலில் தந்தைக்கு வந்திருந்த கடிதத்தைப் பற்றியும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தந்தையிடம் அதைக் கேட்டு வாங்கிப் படிக்கத் தொடங்கினான் ரவி.
அந்த இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்களும் ஒரே நோக்கத்தோடுதான் அனுப்பப்பட்டிருந்தன. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து'(எல்லா உலகமக்களும் நன்றாக இருக்கட்டும்). 'சர்வே ஜனா சுகினோ பவந்து'(எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்) என்ற வேண்டுதலோடு தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் முடிப்பவர்கள் அடுத்த வீட்டுக்காரன் நன்றாயிருப்பதைக் கூடப் பார்க்கப் பொறாதவர்களாக இருப்பது புரிந்தது.
'பாதிக்கப்பட்ட' உள்ளூர் ஆஸ்திகப் பெருமக்களின் சார்பாக வக்கீல் நோட்டீஸ்களாக அவை அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
"ஸ்ரீ மடத்து நிலங்களையும், சொத்துக்களையும், காலி மனைகளையும் ஆஸ்திகர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறவர்கள் வசம் விட்டிருப்பதாலும், மடத்து முத்திராதிகாரியாயிருந்தும், ஆசார அனுஷ்டானங்களுக்கு புறம்பானவர்களோடு பழகுவதும், அப்படிப் பட்டவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வதும், முறையற்ற செயல்களாகப் படுவதாலும் சரியான காரணமும், சமாதானமும் கூறாத பட்சத்தில் சட்ட ரீதியாக ஏன் அவர்மேல் நடவடிக்கை எடுக்கலாகாது?" - என்று சர்மாவைக் கேட்டது அந்த வக்கீல் நோட்டீஸ்.