'உள்ளூரில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கைக்குரிய கோயில்களில் நுழைந்து கர்ப்பக்கிருஹத்துக்கு மிகச் சமீபம் வரை சென்று தரிசித்துக் கோவிலின் விதிகளையும், ஆகம சுத்தத்தையும் மீறுவதானது மனிதாபிமானிகளாகிய ஆஸ்திகர்களைப் பாதிப்பதனால் பிற மதத்தைச் சேர்ந்தவர்களாகிய கமலியின் மேல் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது?' - என்று கமலியின் பெயருக்கு வந்திருந்த நோட்டீஸ் அவளைக் கேட்டது.
கமலிக்கு வந்திருந்த நோட்டீஸை அப்பா கேட்காமலே அவரிடம் படிப்பதற்கு நீட்டினான் ரவி. அவரும் அதை வாங்கிப் படித்தார். பின்பு இரண்டு கடிதங்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தம் வசமே வைத்துக் கொண்டார்.
"நீ ஒண்ணும் கவலைப்பட்டு மனசைக் குழப்பிக்காதேம்மா! எல்லாம் நான் பார்த்துக்கறேன்" - என்று கமலியை நோக்கிச் சர்மாவே சமாதானமும் சொன்னார்.
கமலிக்கு வந்திருந்த கடிதத்தில் கோவிலில் ஆகம ரீதியான சுத்தி பண்ணுவதற்கான செலவை அவள் ஏற்க வேண்டும் என்று வேறு மிரட்டியிருந்தது. சீமாவையர் நேரில் ஈடுபட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர் தூண்டிவிட்டுத்தான் இப்படிக் காரியங்கள் நடக்கின்றன என்பதைச் சர்மாவால் வெகு சுலபமாக அநுமானித்துக் கொள்ள முடிந்தது. முன்பு சீமாவையர் மடத்து ஏஜெண்டாக இருந்த காலத்தில் அவர் ஸ்ரீமடத்து நிலங்களை அடைந்திருந்த பினாமி ஆள் ஒருவன் இப்போது நிலங்கள் தனக்கு அடைக்கப்படாத கோபத்தில் இருந்ததைப் பயன்படுத்தி அவன் மூலம் தான் வைக்கோற் படைப்புக்குத் தீவைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்ற இரகசியம் ஏற்கெனவே சர்மா காதுக்கு எட்டியிருந்தது.
ரவி கேட்டான். "நான் யாராவது வக்கீலிடம் போய்க் கன்ஸல்ட் பண்ணிண்டு வரட்டுமா அப்பா?"
"வேண்டாம். அவசியமானா அப்புறம் நானே உங்கிட்டச் சொல்றேன். கோர்ட், வக்கீல் இந்த மாதிரி விஷயங்களிலே வேணு மாமா பெரிய விவகாரஸ்தர். முதல்லே நான் இது விஷயமா அவரைப் போய்க் கலந்துக்கறேன்." -
"செய்யுங்கோ அப்பா! எனக்கும் அதுதான் நல்ல யோசனையாப் படறது."