கோவிலுக்கு அழைச்சுண்டு போகச் சொல்லும். போயி..." என்று அருகே நெருங்கி மீதி விஷயத்தைச் சர்மாவின் காதருகே குரலைத் தணித்துக் கொண்டு கூறினார் வேணு மாமா.
"இப்படிச் செய்யறதாலே என்ன பிரயோஜனம்னு புரியலே?"
"பிரயோஜனம் நிச்சயமா இருக்கு! ரசீது மட்டும் ஞாபகமா வாங்கிக்கச் சொல்லும். மறந்துடாதேயும்! நாளை, நாளன்னிக்கின்னு ஒத்திப் போட்டுடப்படாது. இதை இன்னிக்கே செஞ்சாகணும்..."
"சரி! நீங்க சொன்னபடியே பண்ணிடச் சொல்றேன். வரட்டுமா?" - என்று சர்மா புறப்பட்டார். வேணு மாமாவும் சர்மாவுக்கு உற்சாகமாக விடை கொடுத்தார்.
அன்று மாலை சர்மா ரவியையும் கமலியையும் அழைத்து "ஏய் ரவி! இன்னிக்கிக் கமலியை கோவிலுக்கு அழைச்சிண்டு போயிட்டு வா! அதோட அங்கே கோவில் அர்த்த மண்டபத்திலே திருப்பணி நிதி வசூல்னு போர்டு மாட்டிண்டு ஒரு கிளார்க் உட்கார்ந்துண்டிருப்பான். அவனிட்ட இந்த ஐநூறு ரூபாயைக் கமலி கையாலேயே குடுக்கச் சொல்லி நம்ம வீட்டு அட்ரஸ் போட்டு அவ பேருக்கே மறந்துடாமே ஒரு ரசீதும் வாங்கிக்கோ" -
என்று கூறி ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை அவனிடம் எடுத்து நீட்டினார் சர்மா.
"திருப்பணி உண்டியல்னு வச்சிருக்காளே; அதிலே பணத்தைப் போட்டுட்டா என்ன? இதற்குப் போயி ரசீது எதுக்குப்பா?"
"கண்டிப்பா ரசீது வேணும். அதுவும் நான் சொன்னபடி கமலி பேருக்கே வேணும். உண்டியல்லே போடப்பிடாது. நேரே குடுத்தே ரசீது வாங்கிண்டு வந்துடு" - என்று மீண்டும் வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார் சர்மா.
அப்பா சொல்லியபடியே அன்று ரவி கமலியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனான். கணவனுக்கு அருகே அடக்க ஒடுக்கமாகச் செல்லும் ஓர் இந்துப் பெண் போல் ரவியோடு தேங்காய் பழத்தட்டு ஏந்திக் கோவிலுக்குச் சென்றாள் கமலி.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...