"சரி! நீங்களே சொல்றப்போ நான் வேற என்ன பண்றது? பதில் எழுதலே; விட்டுடறேன்."-
"ஓய்! சர்மா! தைரியமா இரும். உம்மைப் போல ஞானவான்கள் எல்லாம் வெறுமனே பூச்சாண்டி காட்டறவாளுக்குக் கூடப் பயப்படறதாலேதான் மத்தவா குதிரையேற முடியறது. கமலியையும் ரவியையும் இங்கே புறப்பட்டு வரச்சொல்றதுக்கே பயந்தேள். அப்பவும் நானும் என் பொண்ணும் தான் 'வரச் சொல்லி எழுதும்! பயப்படாதேயும்'னு உமக்கு உறுதி சொன்னோம். இப்பவும் நான் சொல்றேன் பயப்படாதேயும் பயமே இல்லாத கெட்டவனைக் கூட மதிச்சுப் பணிந்து விட்டுக் கொடுத்து விடுவதும் பயந்த சுபாவமுள்ள ஒரு நல்லவனைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருப்பதும் வழக்கமாகிவிட்ட தேசம் இது!"
"பல சமயங்கள்ளே என்னோட சாத்வீக குணத்தை நீங்க பயம்னு தப்பாப் புரிஞ்சுக்கறேள். நான் நீங்க நினைக்கறது போல அத்தனை பயந்தவன் இல்லே. பயந்தவனா இருந்தாத் துணிஞ்சு பிள்ளையையும் கமலியையும் வரவழைச்சு ஆத்திலேயே தங்க வச்சிண்டிருக்க மாட்டேன். எங்காத்துக்காரியே அதற்குக் கடும் எதிர்ப்பு ஓய்! பயந்தவனா இருந்தா மடத்து இடத்தை இறைமுடிமணிக்கு வாடகை பேசி விட்டிருக்க மாட்டேன். நிலங்களைச் சீமாவையரின் பினாமி ஆட்களுக்குக் குத்தகை அடைக்க மறுத்து நியாயமான விவசாயிகளுக்கு விட்டிருக்க மாட்டேன். என் தைரியத்தை நானே விளம்பரப்படுத்தப்படாது..."
வேணுமாமா சர்மாவை நிமிர்ந்து பார்த்தார்.
"சபாஷ்! இப்போதான் நீ உண்மையான வேதம் படிச்ச பிராமணர்! தைரியமில்லாத ஞானம் சோபிப்பது இல்லை. தப்பாக வேதம் படித்தவனை விட நன்றாகச் சிரைப்பவனே மேல்னு மகாகவி பாரதியார் எதிலியோ எழுதியிருக்கார் ஓய்!"
சர்மா சொல்லியதை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பார்த்த போது அவர் பயந்த சுபாவமுள்ளவர் என்று தாமாக அவரது குடுமியையும் விபூதிப் பூச்சையும், பஞ்சகச்ச வேஷ்டியையும் செருக்குத் தெரியாத பவ்யமான நடையையும் பார்த்து நினைத்திருந்ததுதான் தவறோ என்று வேணு மாமாவுக்கே இப்போது தோன்றியது. 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி நினைவு வந்தது அவருக்கு. சிறிது நேரம் யோசனைக்குப் பின், "நீர் பதிலொண்ணும் எழுத வேண்டாம். ஆனா இன்னிக்குச் சாயங்காலமே ரவியிடம் நான் சொன்னேன்னு கமலியைக்