(Reading time: 12 - 24 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 19 - நா. பார்த்தசாரதி

  

"நீ அந்நிய நாட்டுக்காரி. ஏதோ வேடிக்கையாக இதெல்லாம் செய்து கொள்கிறாய் என்று தான் ஜனங்கள் ஆச்சரியத்தோடு உன்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணமானவர்கள்தான் இப்படி மடிசார் வைத்து புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும்" - என்று ரவி விளக்கியபோது தான் கமலி தன் அந்தரங்கத்திலிருந்த அந்த ஆசையை அவனிடம் வெளியிட்டாள்.

   

"தயவுசெய்து இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் சமயம், உங்கள் மதம், உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் கலாசாரம் எதையும் நான் வேடிக்கையாக அணுகவில்லை. மனப்பூர்வமாகவே அணுகுகிறேன். என்னுடைய அணுகுதலில் தவறு இருந்தால் உடனே என்னைத் திருத்துங்கள். மற்றவர்கள் கேலி செய்ய விட்டு விடாதீர்கள். உங்கள் காதலி என்ற நிலையிலிருந்து சாஸ்திர சம்மதத்தோடு உங்களை மணந்து கொண்டவள் என்ற பெருமையை எனக்கு அளியுங்கள். முறையாக ஒரு சிறு சடங்குகூட விட்டுப் போகாமல் நம் திருமணம் நான்கு நாட்கள் பழைய வழக்கப்படி நடக்க வேண்டும்." -

   

"நீ இப்படி ஆசைப்படுவாய் என்பது எனக்குத் தெரியும் கமலீ! எனக்கும் இதில் தயக்கமோ ஆட்சேபணையோ இல்லை. நீ வாய் திறந்து இப்படி என்னைக் கேட்கிறதுக்கு முன்னேயே இதை அப்பாவிடம் பிரஸ்தாபித்திருக்கிறேன் நான். ஆனால் இந்தியர்களாகிய எங்களிடம் உள்ள ஒரு குறையை உன்னிடம் சொல்றதிலே தப்பில்லேன்னு நினைக்கிறேன். வைக்கோற் படைப்பின் மேல் படுத்துறங்கும் நாய் போல இந்தப் பூர்விகமான கலாசாரத்தை நாங்களும் தொடர்ந்து அநுசரிக்காமல் இதற்கு ஆசைப்பட்டுத் தவித்து வருகிற பிறரும் அநுசரிக்க விடாமல் தடுக்கும் மனப்பான்மை இங்கு இருக்கிறது. நூறு வருஷங்களுக்கு முன் ஃப்ரெடரிக் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து வேதங்களையும் உபநிஷதங்களைய்ம் அச்சிட்டுப் பதிப்பிக்கத் தொடங்கிய போது, தாங்கள் அழிய விட்டுக் கொண்டிருக்கிற ஒன்றை அக்கறையோடு பதிப்பிக்கிற அந்த அந்நியனைப் பாராட்டாமல், 'ஒரு நீசன் வேதங்களைப் பதிப்பிப்பதாவது' என்று இங்கே ஆத்திரமாக எதிர்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தியர்களில் சுவாமி விவேகானந்தரும், மகரிஷி தேவேந்திரநாத தாகூரும் தான் மாக்ஸ் முல்லரைத் துணிந்து அவரது பணிக்காக மனமாரப் பாராட்டினார்கள் அன்றைக்கு."

   

"இருக்கலாம். ஆனால் இன்றைய நிலைமை மாறியிருக்கக்கூடும். முன்னைப் போல அவ்வளவு மோசமாக இராதென்று நினைக்கிறேன்." -

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.