துஷ்பிரசாரம் சூடு பிடிக்க இதுவும் உதவியது. அவரும் தயாராகக் காத்திருந்தவர் போல இதைப் பயன்படுத்திக் கொண்டார். இறைமுடிமணி, விசுவேசுவர சர்மா இருவர் மேலும் சீமாவையருக்கு இருந்த கோபத்தை ஒரே சமயத்தில் காட்டுவதற்கு இது பயன்பட்டது. சங்கர மங்கலத்தில் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் பரவுகிறாற்போல் வதந்திகளைக் கிளப்பி விட்டார் சீமாவையர்.
"ஏண்டா நான் கேள்விப்பட்டது நிஜந்தானா? அந்தத் தேசிகாமணி நாடார் நடத்தின கூட்டத்திலே அத்தனை பேருக்கும் முன்னே கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமே அவளோட நீ மாலை மாத்திண்டயாமே?" -
ரவிக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அம்மாவின் கோபம் அதிகமாகி விடப் போகிறதே என்று அடக்கிக் கொண்டு,
"வேறே யாரும் பொம்மனாட்டிகள் முன்வரத் தயங்கினதாலே அவர் என்னைக் கூப்பிட்டுக் கமலிக்கு மாலை போடச் சொன்னார். போட்டேன்." -
"தடி மாடா வளர்ந்திருக்கிற, அத்தனை பெரிய வயசு வந்த பொண்ணுக்கு நாலுபேர் முன்னாடி மாலை போடுன்னு ஒருத்தன் சொன்னா நீ போடலாமோ?"
"போட்டா என்ன தப்பு அம்மா?'
"போடா... உங்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லை. விதண்டாவாதம் பேசியே பழக்கமாப் போச்சுடா நோக்கு."
அது தான் சமயமென்று ரவி அம்மாவிடமிருந்து நழுவினான்.
இது நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் பகல் பன்னிரண்டு மணிக்குத் தபாலில் அந்த வீட்டுக்கு இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று சர்மாவின் பெயருக்கும் மற்றொன்று கமலியின் பெயருக்கும் இருந்தன. சர்மாவும், கமலியும் கையெழுத்துப் போட்டுத் தங்கள் தங்கள் பெயருக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை வாங்கினார்கள். சர்மாவுக்குத் தன் பெயரில் பதிவுத் தபால் வந்தது ஆச்சிரியமில்லை. கமலிக்கு யார் ரிஜிஸ்தர் கடிதம்