"இருபது வருஷமா ப்ரம்மோத்ஸ்வத்துக்கு வந்து இந்தாத்துலே தங்கிண்டிருந்த பெரியம்மாவை ஒரு நிமிஷத்திலே எடுத்தெறிஞ்சு பேசித் துரத்தி விட்டுட்டேளே? எங்காத்து மனுஷாள்னா உங்களுக்கு அத்தனை எளக்காரமோ? புதுசு புதுசா யார் யாரோ இங்கே வந்து மினுக்கறாங்கறதுக்காகப் பழைய பந்துக்களைத் துரத்தணுமா இப்பிடி?" -
"நான் ஒண்ணும் யாரையும் துரத்தலை! அவளா வந்து 'என் ஆசாரத்துக்கு இனிமே இங்கே ஒத்துக்காது. நான் சங்கர சுப்பனாத்துக்குப் போலாம்னு பார்க்கறேன்'னாள். அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? 'இல்லே! நீங்க கண்டிப்பாய்ப் போகக்கூடாது. இங்கே தான் தங்கணும்'னு அவ கால்லே விழுந்து என்னைக் கெஞ்சச் சொல்றியா? அவளே 'நான் போகணும்'னா; சரி! உங்க இஷடம்னேன்." -
"ஊரெல்லாம் போய் என் தலையை உருட்டப் போறா? ஏற்கெனவே ஊர்லே உங்க தலை உருண்டுண்டிருக்கிறது போறாதுன்னு இதை வேற பண்ணியிருக்கேன்..."
சர்மா இதற்குப் பதில் பேசவில்லை. பெண்களுடன் பேசும்போது ஓர் எல்லையில் ஆண்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பது அந்தப் பூசலை ஒரு கலகமாக நீடிக்க விடாமல் தடுக்க உதவும் என்பது சர்மாவின் நம்பிக்கை.
ஆனால் கமலியின் பொருட்டு அவளை மையமாக வைத்து இப்படி ஒரு குடும்பக் கலகம் நடந்தது என்பதை அவளை அறிய விடாமல் பார்த்துக் கொண்டார் சர்மா.
"நீ பண்ற கூத்தாலேதான் இப்பிடியெல்லாம் நடக்கறது. இப்பிடி எங்க பெரியம்மா வயித்தெரிச்சலை நீ ஏண்டா கொட்டிக்கணும்?" - என்று ரவியைச் சண்டைக்கு இழுத்துப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.
"நான் யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கலே அம்மா! உங்க பெரியம்மா அவளாப் புறப்பட்டுப் போனா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? கமலி உன்னைத் தெய்வமா மதிச்சுப் பேசறா... நீதான் அநாவசியமா இப்போ அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே" என்றான் ரவி.