மூன்று பதங்களையும் போலவே ஒலிக்கக்கூடிய பதங்கள், எட்டு, ஒன்பது, பத்து எண்களுக்கு அந்த மூன்று மொழிகளிலும் ஒரே விதமாக அமைந்திருப்பதைக் கண்டு சர்மா விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அடைந்தார். ஒன் என்ற ஆங்கிலப் பதத்தையும் ஒன்று என்ற தமிழ்ப் பதத்தையும் கூட ஒப்பிட்டு விளக்கினாள் அவள். அங்கே தங்கியிருக்கிற அந்த ஓராண்டுக்குப் பயன்படட்டும் என்று ரவி சென்னையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் லைப்ரரியிலும், அமெரிக்கன் சென்டர் லைப்ரரியிலும், போஸ்டல் மெம்பர்ஷிப் எடுத்திருந்தான். புத்தகங்களைத் தபாலில் பெற்றுக் கொள்ள வசதியாயிருந்தது. ஓரிரு மாதங்களுக்கு இடையே ரவியும், கமலியும் அவ்வப்போது மேற்கொண்ட சில பிரயாணங்கள் ஐந்து நாட்கள் பத்து நாட்கள் என்று ஆயின.
அப்படி ஐந்து நாட்கள் பத்து நாட்கள் ரவியும் கமலியும் ஊரிலில்லாமல் போகும்போது வீடே வெறிச்சோடிப் போனாற் போலாகிவிடும் சர்மாவுக்கு. கமலியும் ரவியும் ஊரிலிருந்த நாட்களில் ஒன்றில் இறைமுடிமணி தம்முடைய பகுத்தறிவுப் படிப்பகத்தில் கமலி தமிழில் பேசும் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாலும், ஒரு பிரெஞ்சுக்காரி தமிழில் பேசப் போகிறாள் என்பதாலும் நிறையப்பேர் திரளாக வந்திருந்தார்கள்.
இறைமுடிமணி கமலியை அறிமுகம் செய்து வைத்தும் பேசும்போது ஒளிவு மறைவின்றி அவள் விரைவில் விசுவேசுவர சர்மாவின் மருமகள் ஆகப் போகிறாள் என்னும் பொருள் தொனிக்கப் பேசியிருந்தார். அந்தக் கலப்புத் திருமணத்திற்கு அட்வான்சாகப் படிப்பகத்தின் சார்பில் வாழ்த்துக் கூறுவதாகவும் சொல்லியிருந்தார்.
'திராவிட மொழிக் குடும்பம்' என்ற தலைப்பில் தமிழ் மொழியைப் பற்றிய அறிவுப்பூர்வமான மொழியியல் கணிப்பை விவரித்தாள் கமலி. அவள் பதினைந்து நிமிஷங்களுக்கும் மேலாகத் தமிழிலே பேசியது கூட்டத்துக்குப் பெரிதும் வியப்பை அளித்தது. கூட்டத்தில் கமலிக்கு மாலையணிவிக்க விரும்பிய இறைமுடிமணி அங்கு வந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து ஒருவரைத் தேடி அவர்கள் எழுந்திருந்து வரத் தயங்கிக் கூசியதால், ஒருவிநாடி யோசித்து விட்டு, 'வெண்ணெய் பக்கத்திலே இருக்கறப்ப நெய்க்கு ஏன் தவிக்கணும்? இந்தாங்க! நீங்களே அவளுக்கு இந்த மாலையைப் போடுங்க தம்பி....?' என்று ரவியிடமே மாலையை நீட்டினார். அவனும் சிரித்துக் கொண்டே மாலையை அவர் கையிலிருந்து வாங்கிக் கமலிக்குச் சூட்டினான். இந்த நிகழ்ச்சி அக்ரகாரம் முழுவதும் பரவியபோது சீமாவையரின் பழைய