"ஆமாண்டா! இவ ஒருத்தி வந்து என்னைத் தெய்வமா மதிக்கலேன்னு தான் நான் ராப்பகலாத் தவிச்சுண்டிருந்தேன். போடா போக்கத்தவனே..."
"எங்கேம்மா போகச் சொல்றே. மறுபடியும் பாரிஸுக்கு உடனே புறப்பட்டுடட்டுமா?"
காமாட்சியம்மாள் ஏதோ காரியமிருப்பது போல் பேசாமல் உள்ளே போய்விட்டாள்.
கமலியின் படிப்பு மட்டும் தடங்கள் இல்லாமல் சர்மாவிடம் தொடர்ந்தது. அன்று ஆனந்தவர்த்தனரின் தொனியோலோகம் பற்றியும், தொனிக்கும், வக்ரோக்திக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், கமலி சர்மாவிடம் கேட்டுக் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அவள் நுணுக்கமாக ஒவ்வொன்றாய்க் கேட்பது பற்றி மகிழ்ந்த சர்மா,
"சொல்லிக் கொடுக்க ஆளில்லாமே இதெல்லாம் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா மறந்து போக ஆரம்பிச்சாச்சு. நல்ல வேளையா, நீ வந்து கேக்கறதாலே நானும் இதெல்லாம் ஞாபகப்படுத்திக்கறேன். அறிவுக் களஞ்சியமாகவும் கலாச்சாரச் சுரங்கமாகவும் இருக்கிற சமஸ்கிருத மொழிக்கு இப்படி ஒரு நிலை இந்தத் தேசத்திலே ஏற்படும்னு மகான்கள் கூட நினைச்சுப் பார்த்திருக்க மாட்டா அம்மா..."
"பல ஐரோப்பிய மொழிகளின் தாயான லத்தீனுக்கு ஐரோப்பாவில் இன்று என்ன கதி ஏற்பட்டிருக்கிறதோ அது தான் இந்தியாவில் இன்று உங்கள் சமஸ்கிருதத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. புராதனமான லத்தீன் மொழி சர்ச்சுக்கள், மத ஸ்தாபனங்கள், வைதீகச் சடங்குகளுக்கான மொழியாக மட்டும் இன்று எஞ்சி நிற்பது போல் தான் சமஸ்கிருதமும் உங்கள் நாட்டில் எஞ்சி நிற்கிறது. ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மிகமிகப் பழைமையான சமஸ்கிருதம், கிரீக், லத்தீன் மூன்றிலும் சமஸ்கிருதமே மூத்தது என்று பல உலகறிந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்."
லத்தீன் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் அவள் ஒப்பிட்டு விளக்கிய விதம் சர்மாவுக்குப் பிடித்திருந்தது. எட்டு, ஒன்பது, பத்து என்னும் மூன்று எண்களுக்கான பதங்களும் முதல் பத்து எண்களுக்கான மற்றப் பதங்களும் லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் மூன்றிலும் ஒரே விதமாக இருப்பதையும் சர்மாவுக்கு எழுதிக் காட்டி விளக்கினாள் அவள். அஷ்ட, நவ, தச என்ற