அந்த கலாசாரத்திலேயே அதன் வாரிசாகப் பிறப்பெடுத்திருப்பவராகச் சொல்லிக் கொள்ளும் சீமாவையருக்குச் சீட்டாடவே நேரம் போதவில்லை. அவர் கோயிலுக்குப் போய் வருஷக் கணக்கில் இருக்கும். ஆவலோடு கோவிலுக்குப் போகிறவளுக்கு ஏன் போகிறாய் என்று வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்ப முடிகிறது. இந்த முரண்பாட்டை நினைத்துப் பார்த்த போது சர்மாவின் உள் மனம் கொதித்தது.
சர்மா தேடிச் சென்றபோது வேணுமாமா எங்கோ புறப்படத் தயாராயிருந்தாற் போல் தோன்றியது.
"எங்கேயோ கிளம்பிண்டிருக்கேள் போல் இருக்கே...? போயிட்டு அப்புறம் சாவகாசமா வரட்டுமா?"
"அவசரம் ஒண்ணுமில்லே! வாங்கோ, போஸ்டாபீஸ் வரை போலாம்னு புறப்பட்டேன். இப்போது உடனே போய்த்தான் ஆகணும்கிறதில்லே. அப்புறம் கூடப் போய்க்கலாம். நீங்க உட்காருங்கோ... அதென்ன கையிலே? லெட்டரா?"
சர்மா உட்கார்ந்தார். வேணுமாமாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அந்தக் கடிதங்களையே அவரிடம் நீட்டினார்.
"படியுங்கோ... இது விஷயமாகத்தான் உங்ககிட்டப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்! இது ரெண்டும் இப்பத்தான் சித்தே முன்னாடி ரிஜிஸ்டர் தபால்லே வந்தது..."
"ஒண்ணு கமலி பேருக்கு வந்திருக்காப்லே இருக்கே?"
"ஆமாம்! அவ பேருக்கு ஒண்ணும் எம் பேருக்கு ஒண்ணுமா வந்திருக்கு..."
- வேணு மாமா அவற்றை ஒவ்வொன்றாகப் படித்தார்.
"ஓகோ! விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வந்துடுத்தா. யார் வேலை இதெல்லாம்? வைக்கோல் படப்புக்குத் தீவைச்சு நாசம் பண்ணினது போறாதுன்னு இது வேறயா?"