"யார்னு நான் சொல்லித்தான் தெரியணுமா? எல்லாம் சீமாவையர் வேலைதான்! என்னமோ ஆத்திரத்திலே, எது எதையோ பண்ணிண்டிருக்கார். என்மேலே தான் ஆத்திரம்; என் வீட்டிலே வந்து தங்கின பாவத்துக்கு அந்த பொண் மேலேயும் இப்படி விரோதம் காண்பிக்கணும்?"
"இப்போ என்ன பண்றதா இருக்கேள்?"
"என்ன பண்றதுன்னு உங்க கிட்டக் கலந்து பேசலாம்னு தான் இங்கே புறப்பட்டு வந்தேன்..."
"வந்த மட்டிலே ரொம்ப சந்தோஷம்! ஆனா இதுக்கு நீரோ கமலியோ பதிலொண்ணும் எழுத வேண்டாம். தூக்கி மூலையிலே எறிஞ்சிட்டுப் பேசாமே இரும். சொல்றேன்."
"எங்க மேலே ஏன் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு என்னமோ நோட்டீஸ் விட்ட மாதிரியின்னா அனுப்பிச்சிருக்கா? பதில் எழுதாமே எப்பிடிச் சும்மா இருக்கிறது?"
"நடவடிக்கை எடுக்கட்டுமே. அப்ப பாத்துக்கலாம்."
"'ஆஸ்திகாள் மனம் புண்படறாப்பிலேயோ, ஸ்ரீ மடத்து நெறிமுறைகளுக்குப் புறம்பாகவோ எதுவும் செஞ்சுடலே' ன்னு நானும் எனக்கு இந்து மதத்தின் மேலேயும் இந்து கலாசாரத்தின் மேலேயும் மதிப்பும் பக்தியும் இருக்கு. அந்த மதிபோடேயும், பக்தி சிரத்தையோடயும் தான் நான் கோவிலுக்குப் போறேன்'னு கமலியும் ஆளுக்கொரு பதில் எழுதிப் போட்டுட்டா நல்லதில்லையா?"
"வீண் வம்புக்காகவும் விரோதத்துக்காகவும் அனுப்பப்பட்டிருக்கிற இந்தக் கடிதாசுகளுக்கு அத்தனை மரியாதை தரவேண்டியது அவசியந்தானா சர்மா? நீரோ, கமலியோ, பதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவா உங்க மேல் நடவடிக்கைன்னு கோர்ட்டுக்குப் போகப் போறதென்னவோ நிச்சயம். நீர் பதில் எழுதறதாலே அது ஒண்ணும் மாறவோ குறையவோ போறதில்லே. பேசாம இரும். மேற்கொண்டு அவா என்ன தான் செய்யறான்னு பார்ப்போம், அப்புறம் நாம் பண்ண முடிஞ்சதைப் பண்ணலாம்."