இரண்டு கடிதங்களையும் எடுத்துக் கொண்டு வேணு மாமா வீட்டுக்குப் புறப்பட்டார் சர்மா.
தெருத் திரும்பும்போது வில் வண்டியில் அமர்ந்தபடி சீமாவையர் எங்கோ புறப்பட்டுப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. சர்மா எந்தத் திசையில் நடந்து போய்க் கொண்டிருந்தாரோ அந்தத் திசையிலேயே இவருக்கு முன்பாகச் சிறிது தொலைவில் அந்த வண்டி போய்க் கொண்டிருந்ததனால் வண்டியில் பின்புறம் பார்த்தபடி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சீமாவையர் சர்மா பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார். உடனே அவர் வண்டியில் இருந்தபடியே உரத்த குரலில் சர்மாவிக் குசலம் விசாரித்தார். சர்மாவும் சிரித்தபடியே மறுமொழி கூறினார்.
"நீர் ஊரிலே இல்லாத சமயத்திலே படப்புத் தீப்பிடிச்சு எரிஞ்சுதுன்னா. போய்ப் பார்த்து உம்ம பையனிட்ட விசாரிச்சுட்டு வந்தேன். ஏதோ கஷ்டகாலம் போலிருக்கு."
"....."
அவர் அப்படி வண்டியில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டு வர தான் பின்னால் அதற்குப் பதில் சொல்லிய படியே தொடர்ந்து நடந்து செல்வதைச் சர்மா விரும்பவில்லை.
"வரேன்... அப்புறமாப் பார்க்கலாம்" - என்று கூறி விட்டு விரைந்து வண்டியைக் கடந்து அதற்கு முன்னால் நடக்கத் தொடங்கினார் அவர். ஓர் அயோக்கியனுக்குக்கூட நல்லவனைப் போலப் பிறருக்கு முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாவனையை விட முடியாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார் அவர். சில சமயங்களில் சுபாவமாகவே நல்லவனாயிருப்பவனை மிஞ்சிவிடும் அளவுக்குப் பாவனையினால் நல்லவராக இருப்பவர்கள் சாதுரியமாக நடித்து அதில் வெற்றியும் பெற்று விடுவதாகக் கூடத் தோன்றியது. -
பூர்வ ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோ கமலி இந்தியக் கலாசாரம், இந்திய வழிபாட்டு முறை என்றால் அதற்காக மனம் நெகிழ்ந்து உருகுகிறாள். கோவிலுக்கு உள்ளம் மலர்ந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் ஓடுகிறாள்.