(Reading time: 10 - 20 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

   

"நீதான் அவங்க மனசையும் மாத்தணும். ஒருத்தரோட முரண்டுக்காக மத்தவங்க தாங்க ஆசைப்படற நல்வாழ்வைக் கெடுத்துக்க முடியாது."

   

"வக்கீல் நோட்டீஸ் விஷயமா என்ன சொல்றே நீ?"

   

"சும்மா மிரட்டறானுவ! கோர்ட்டுக்கு வந்தா ஒரு கை பார்த்துடலாம். நீ தைரியமா இரு. எதுக்கும் பயப்படாதே!" -

   

வேணு மாமாவின் யோசனையை நண்பனிடம் கூறினார் சர்மா.

   

"நல்ல யோசனைதான்! நோட்டீஸுக்குப் பதில் எழுதாதே. விஷயம் கோர்ட்டுக்கு வரட்டும் பார்க்கலாம்."-

   

மேலும் சிறிது நேரம் பொதுவான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தம் கடை முகப்பு வந்ததும் இறைமுடிமணி விடைபெற்றார். அப்போது சர்மாவின் மனம் தெளிவாக இருந்தது. நண்பனிடம் மனம்விட்டுப் பேசியதில் கலக்கங்கள் நீங்கியிருந்தன.

   

சர்மா வீடு திரும்பியபோது பார்வதி விளக்கு ஏற்றி வைத்துத் தீப நமஸ்காரம் செய்து சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள். காமாட்சி பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பேசுவதற்குப் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.

   

பார்வதியின் சுலோகம் முடிந்ததும், "பாரு! இங்கே வாம்மா!" - என்று சர்மா மகளைக் கூப்பிட்டார். பார்வதி அவரருகே வந்ததும் அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று, "ஒரு முக்கியமான விஷயமாப் பூக்கட்டிக் குலுக்கிப் போடறேன். சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு ஒரு பொட்டலம் எடும்மா" - என்றார்.

   

பார்வதி அப்பா சொன்னபடியே செய்தாள். அவள் எடுத்துக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததும், சர்மாவின் முகம் மலர்ந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.