இருந்தார். ஆகையால் வேலையைக் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோவையில் மூன்று மாதங்கள் பயிற்சி போல் இருந்து கற்றுக் கொண்ட பிறகு வேறு எந்த இடத்திற்காவது மாற்றுவார்கள் என அறிந்தேன். ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கோவையில் குடும்பம் நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இடையே ஒருமுறை ஊர்க்குப் போயிருந்தேன். தங்கை மணிமேகலை அப்போது புக்ககத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் நான் பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங்கி விழித்தபோது தங்கையும் கயற்கண்ணியும் பாக்கிய அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
"எதிலும் பிடிவாதக்காரராக இருக்கிறார். எதை எடுத்தாலும், ஒரு கோடு போட்டாற்போல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இல்லாவிட்டாலும் இது தப்பு அது தப்பு என்கிறார்" என்றாள் தங்கை.
"அய்யய்யோ! இதைக் கேட்டாலே பயமா இருக்குது அம்மா" என்றாள் என் மனைவி.
"என் அண்ணன் ஒரு நாளும் அப்படிக் கண்டிப்பாக நடக்கமாட்டார். நான் சொல்கிறேன் அண்ணி" என்றாள் தங்கை.
"மணிமேகலை! நீ சொல்வதைப் பார்த்தால் அவர் ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே" என்றார் பாக்கியம்.
"கெட்டவர் அல்ல. பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம்போல் விட்டு விட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடைவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கறுப்பு மையில் எழுதினால் ஆசிரியர்கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரைப் பக்கமாக எழுதினால் கோபித்துக்