"ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்?" என்றேன்.
"இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும்? நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்" என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.
இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். "எவ்வளவு செல்வம் வேண்டுமாம்? எதற்காகவாம்?" என்றேன்.
"எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்."
"நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா?"
"தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் சொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று."
"இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது?"
"அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்."
பழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.
"நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா" என்று பாக்கியம் கேட்டார்.
"இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்."