அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே! ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார்? அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
உண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.
மனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.
இடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், "வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா?" என்றாள்.
"இது என்ன?" என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.
"பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது?" என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.
"இருக்கட்டும். அப்பாவும் இருக்கிறாரா?" என்று வருந்தியவாரே கேட்டேன்.
"அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்" என்றாள்.
உள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு