(Reading time: 32 - 63 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

"அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனாரிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்?" என்றார்.

  

"இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது" என்றேன்.

  

"நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?"

  

"மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?"

  

"அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? - அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே"

  

என்னால் நம்பவே முடியவில்லை. "அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு" என்றேன்.

  

"உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்" என்றார்.

  

என் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.