"ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா?" என்றார்.
"மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா"
"நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்."
இவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்கிறானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.
ஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.
"நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்" என்று எழுதி இருந்தான்.
அம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ? ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய லக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.
சந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை