வியந்தேன். "அடே யாரடா சிப்பாய்?" என்றேன்.
கற்பகம் என்பின் வந்தவள் "திருவாய்மொழி" என்றாள்.
உடனே, "என் மருமகனா? அடடே" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.
என் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.
"மாதவி என்ன செய்கிறாள்?" என்றேன்.
"அப்பா எங்கே என்று கேட்கிறாள்" என்றாள் கற்பகம்.
"இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றாள் என் மனைவி.
"நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்" என்றேன்.
அம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, "கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா?" என்கிறார்.
"பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்?" என்று சிரித்தேன்.
சிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.