மாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். "உன் கணவர் கடிதம் எழுதினாரா?" என்று கேட்டேன்.
"இல்லை. உங்களுக்கு எழுதினாரா?" என்றாள்.
"எழுதினார். நான் எழுதவில்லை."
"நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா?"
"தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்?"
"உங்களுக்கு எல்லாவற்றையும் எழுதினாரா?"
"எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா?"
"நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்."
அவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.
"உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்" என்றேன்.
"எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்."
"வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே."
"நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று