எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்."
"பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது."
"யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே."
வேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.
பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, "கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்" என்றாள்.
கற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.
நான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து "நகைகள் காணோமே எங்கே?" என்றேன்.
"நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்" என்றாள் மனைவி.
"இவளே கழற்றிக் கொடுத்துவிட்டாளா? அவனே வற்புறுத்தினானா?"
"இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா? அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை."
பெருமூச்சு விட்டேன். "சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே" என்றேன்.
"அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்."
திகைத்தேன். "அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா" என்று கேட்டேன்.