அந்தக் கர்ப்பிணிப்பெண், உள்ளே போய் காலிங்பெல்லை அழுத்தினாள். கதவு திறக்கப்படாமலேயே, ஜன்னல் வழியாக ஒரு பெண் முகம், பேய் முகம் போல் அங்குமிங்குமாய் ஆடிக்கொண்டே பேசியது. அப்போது அதன் கழுத்தில் கிடந்த நெக்லஸ், ஜன்னல் கம்பிகளில் மோதி, 'குங்க்குங்' என்ற ஒலி எழுப்பியது.
"ஏய் சரோசா, ஒனக்கு எத்தனவாட்டி சொல்றது, பின்பக்கமா போகப்படாது?"
"பந்தலில பிரசவத்தை வச்சுக்க முடியாதே -"
சரோசா, அப்படிச் சொல்லிவிட்டுச் சிரிக்கத்தான் போனாள். ஆனால், சிரிப்பைக் கொடுப்பதற்காக உள்ளடங்கி விலகிப்போக வேண்டிய பற்கள், ஒன்றையொன்று கடித்துக்கொண்டன. இந்தத் தடிச்சி, இந்த வீடு 'குட்சயா' இருக்கப்போ, அந்த ஆசாமிக்கி சின்னவீடா வந்தவள். ஒண்டவந்த இந்தப் பிடாரி, இந்த வீட்டு லட்சுமியை விரட்டிட்டு. ஆரம்பத்துல கலக்கல கத்துக்கொடுத்தவளே இவதான்.பொம்மனாட்டிக்கி பொம்மனாட்டியா உதவிக்கு வந்தவள். இப்ப என்னடான்னா டாவு காட்டுறா டாவு... ‘அடியே கஸ்மாலம், நீ பூட்டிருக்குற கம்மலு, கண்டல் கஞ்சியில வந்ததுடி... கழுத்துல பாம்புமாதிரி தொங்குதே நெக்கலசு 'ஊரலுல' வந்துதுடி. என்னய்யா உள்ள வரவேண்டாம்னு சொல்ற? இதுக்குப் பேருதாண்டி டைம்ங்கறது...
சரோசா, ஜன்னலில் பதிந்த பூசணிக்காய் முகத்தை கொட்டக் கொட்ட பார்த்தபடியே, மனதிற்குள் அவளைக் கண்டபடி திட்டினாள். அந்தத் திட்டு, அவள் காதுகளுக்கு உரக்கவே கேட்டது. ஜன்னல்காரி இன்னும் கதவைத் திறக்காமல் ஏதோ பதில் சொல்லப் போனபோது, இன்னொரு முகம் தோன்றியது. அது உடம்பை நிமிர்த்தியபோது தளதளப்பான வயிறு தெரிந்தது. கழுத்து செயின் தொப்புளை மறைத்தது. சரோசா அந்த முகத்திடம் முறையிட்டாள்:
"பாரு துரையண்ணே! அக்கா கதவ தெறக்கமாட்டக்காள்."
"அடேடே, சரோசாவா? ஒனக்காகக் காத்துக்காத்து கண்ணே நோவெடுத்துட்டுது. வழியிலே பழகாத 'நாய்' ஏதும் மடக்கிட்டோன்னு பயந்துட்டேன். ஏய் சாந்தி, கதவத்தெறமே.”