கொடுத்தன. சரோசா வியாக்யானம் செய்தாள் :
"எங்கத் தொழிலு மோசந்தான், இல்லங்கல. ஆனால் அதுலயும் ஒரு நியாயம் கீது. ஸ்பெஷல் கிளாஸ் பத்து ரூபா, சாதா அஞ்சு ரூபா. வேணுமுன்னா ரெண்டையும் குடிச்சு, டெஸ்ட் பண்ணிக்கோ; இல்லாட்டி நடையக்கட்டு."
அப்போது முப்பது, முப்பந்தைந்து வயது ஆசாமி ஒருவன் உள்ளே வந்தான். குறுந்தாடிக் காரன். சரோசாவின் அப்போதைய வயிறுமாதிரி அவனுடைய வயிறும் பெருத்திருந்தது. சட்டென்று சட்டையைத் தூக்கி மறைத்து வைத்திருந்த நான்கு தேங்காய்களைக் கீழே வைத்தான். பனியனுக்குள் கிடந்த, ஒரு சீப்பு வாழைப்பழத்தையும், இரண்டு ஆப்பிள் பழத்தையும் எடுத்துவைத்தான். சரோசா சிரித்துக் கொண்டே கேட்டாள்:
“என்ன கோவிந்தண்ணே, கண்டக்கஞ்சி கிடைக்கலியா?”
"அத ஏம்மா கேக்கிறே; அந்த கஞ்சிக்காரன், நானு பத்து வருஷம் சர்வீசு போட்டிருக்கறதையும் கணக்கில எடுத்துக்காம வெரட்டிட்டான். காசு இல்லாகாட்டி என்னம்மா? சரக்குக்கு சரக்கு கொடுக்கிறப்போ வாங்கினா என்னம்மா? சோதாப்பய, என்னைய சாதாப்பயலா நினைச்சிட்டான்... தூ."
சரோசா, என்ன செய்யலாம் என்பது போல் துரையைப் பார்த்தாள். துரை, அந்த சுண்டக்கஞ்சிக் காரனோடு ஒருவார காலமாக நிழல் யுத்தம் செய்து கொண்டிருக்கிறான். ஒரு சொம்புக் கஞ்சியை அவன் பதினைந்து ரூபாயிலிருந்து பத்து ரூபாய்க்கு இறக்கியதால், இவன் கலக்கல் விற்பனைக்குக் கஷ்டம் வந்திருக்கிறது. இதனால், இரண்டு கோஷ்டிகளும் கம்பு, அரிவாள் இல்லாமல் மோதிக்கொண்டன. ஆகையால் இப்போது அவன் ஜாக்கிரரையாய் பேசினான் :
"இந்தாப்பா, ஊர்க் கத வேணாம். தேங்காய் ரெண்டு ரூபா; வாயப்பயம் அஞ்சு ரூபா; ஆப்பிள் எட்டணா. இஷ்டமிருந்தாக் கொடு. இந்தக் கணக்குப்படி ஒனக்கு ரெண்டு கிளாஸ்கூடத் தேறாது. ஆனாலும் தாரேன், சம்மதமா?"
கோவிந்தின் சம்மதமில்லை என்பது போல் வாயை பன்றி உதடுகள் மாதிரி ஆக்கிக் காட்டினான். பிறகு எகிறப்போனான். எகிறினான்.