Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 12 - சு. சமுத்திரம்
சரோசா விடுதலையாகி ஒரு வாரம் ஓடி விட்டது. இளங்கோ, அவளை இப்போது மறந்து விட்டான். அவள் விடுதலையானதைக் கேள்விப்பட்டு, பாமாவின் தந்தை மிஸ்டர். ரமணன்தான், துள்ளினார். அவருக்கு, அவள் விடுதலையாகி விட்டாள் என்பதை விட, புத்திசாலியான தனது மகளும், மக்குசாமியான கப்பையாவின் மகனும், தனது முதுகுக்குப் பின்னால் இப்படியொரு விடுதலையை வாங்கிக் கொடுத்து விட்டார்களே என்ற கோபந்தான். ஒருவேளை இந்த இருவரும் அவரையே இந்திரன் சந்திரன் என்று துதிபாடியிருந்தால், அவரே முன்னால் நின்று சரோசாவை விடுவிக்கப் பாடுபட்டிருப்பார். என்றாலும், பாமா,தனது வருங்காலக் கணவன் மீது பட்டாக்கத்தி பாயக்கூடாது என்ற பயத்தில் சரோசாவை விடுவித்தாக மறைமுகமாய் சொன்னதை ரமணன் நேரிடையாகவே புரிந்து கொண்டார். 'டா' போட்டுப் பேசும் இளங்கோவை ‘நீங்க.. நாங்க' என்று மரியாதை போட்டுப் பேசத் துவங்கி விட்டார். சங்கத்துக்காரர்கள் கமிஷனரிடம் எப்போது போகலாம் என்றார்கள். அதற்கு ரமணனோ, தானே கமிஷனரை நேரிடையாகச் சந்தித்து சங்கத்தின் தீர்மானத்தைக் கொடுத்து விட்டதாக பொய்யளந்தார். இதனால் அவர்மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உறுப்பினர்களுக்கு ஒரு ஆசை. ஆனால், உறுப்பினர் பதவியை புதுப்பிப்பதற்கு ஐந்தாறு ஆண்டு சந்தாக்களை கட்டியாக வேண்டும். போயும் போயும் ஒரு துப்புக்கெட்ட சங்கத்தின் விவஸ்தைகெட்ட தலைவரான ரமணனை இறக்குவதற்கு அவர்கள் காசு செலவழிக்கத் தயாராக இல்லை. பாக்கியம்மாவும், பாமாவின் உபதேசத்திற்குப் பிறகு, முக்கி முனங்கி வழிக்கு வந்தாள். இப்படி எல்லோரும் எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்த போது...
இளங்கோ, வழக்கம்போல் பைக்கில் ஏறினான். அலுவலகங்கள் துவங்கும் நேரம் பஸ் நிலையத்தில் நிற்கும் பாமா இந்நேரம் கத்திக் கொண்டிருப்பாள். கடந்த ஒரு வார காலமாக, இந்த பாமா பஸ்ஸில்தான் போகப் போவது போல ஒரு பாசாங்குடன் வீட்டிலிருந்து புறப்படுவாள். இளங்கோவின் வீட்டைப் பாராமலே போவாள். பிறர் சந்தேகப்படக்கூடாது என்பதற்காக எதிரே வருகிற பஸ்களைக் கூட தனது பஸ்தானா என்பது போல் உற்றுப் பார்ப்பாள். இந்தப் பையன் இளங்கோவும், தற்செயலாய் பஸ் நிலையம் பக்கம் பைக்கில் போவது போலவும், அங்கே அப்போதுதான் அவளைப் பார்ப்பது போலவும், வேறு வழியில்லாமல் அவளை ஏற்றிக் கொண்டு போவது போலவும், ஒரு சின்ன செட்அப். இது நன்றாகத்தான் செயல்பட்டு வருகிறது. இன்றைக்கு கொஞ்சம் லேட். அம்மாவும் தங்கையும் நடத்திய வீட்டு பெரும்போரில் அவனே ஒரு ஐ.நா. வாக மாறி, தீர்க்க வேண்டிய நிலைமை.