“வயக்கம்போல பட்டை பூடுறதுக்கு அங்கே போனேனா... சரோசாதான் ஊத்திக் கொடுத்தாள். அப்போ அவளோட தோஸ்துங்க உன்னை பட்டாக்கத்தியாலே ஒரு சொருகு சொருகப்போறதா பேசுனாங்க. நீ வேலை பார்க்கிற ஆபீசு, பாமாவை ஏத்திட்டுப் போற பஸ்டாண்டு, நீங்க டூயட் பாடுற பீச் அல்லா இடத்துலேயும் ஒன்ன வாச் பண்றாங்கோ. இன்னும் நாலு நாளைக்குள்ளே தீர்த்துக் கட்டப் போறதாய் சாராயம் குடிக்காமலே சபதம் போட்டாங்கோ."
"இதுக்கு சரோசா என்ன சொன்னாள்?"
"ஏதோ சொன்னாள். அதுக்குள்ளே சாராயம் என்னோட தலைக்குள்ளே பூட்டு. கிக்காய் படுத்துட்டேன். சரோசா பேசறதை பார்க்க முடிஞ்சது; ஆனால் கேக்க முடியலே. இதுல்லாம் நேற்று நைட்லே நடந்த சமாசாரம்."
"சரி. இந்தா... பத்து ரூபாய். ஒரு கிளாஸ் போட்டுக்கோ."
"நானும் மனுசன்தான். இந்தவாட்டி உன்கிட்டே காசு வாங்கறது நானு உன்மேலே வச்சிருக்கிற பிரண்டுசிப்பை அசிங்கப்படுத்துறமாதிரி. ஜாக்கிரதையா போ. நானும் என் பங்குக்கு அப்பப்போ ஒட்டு கேக்கேன்."
இளங்கோவிற்கு, அவனது புல்லட் வண்டி மாதிரி உடம்பெல்லாம் ஆடியது. முடிந்து போனதாய் நினைத்த ஒன்று, ஒரு முடிச்சோடு வந்திருப்பதை அறிந்ததும், அவன், மூளை மரத்ததுபோல் நின்றான். மெல்ல மெல்ல இன்றோ நாளையோ, தான் தாக்கப்படலாம் என்ற எண்ணம் அச்சமாகி பீதியானது. அதே சமயம் நன்றி மறந்த ஒருத்தி இப்படிப்பட்ட ஒன்றில் ஈடுபட்டால் அதை சந்திக்க வேண்டும் என்ற நொந்துபோன வீராப்புடன் பைக்கை அழுத்தினான். கண்மண் தெரியாமல் ஓட்டினான். என்னதான் தனக்குள்ளே வீரம் பேசிக் கொண்டாலும், எதிரே தற்செயலாக அவனைப் பார்ப்பவர்கள்கூட அவனுக்கு எதிரிகள்போல் தோன்றியது. பாமா நிற்கும் இடத்திற்கு சரியாக முன்னால் நிற்கும் பைக்கை, சிறிது தூரம் தள்ளிப் போய் நிறுத்தினான். தோளில் ஒரு ஜோல்னாப் பையைத் தொங்கப் போட்டுக் கொண்டு, பாமா அவனைப் பாராதது போல் நின்றாள். பிறகு அவன் அருகே ஓடிவந்து கத்தினாள்:
"ஆமா, பைக்கை அங்கேயே நிறுத்தினால் என்ன? என்னைக் காக்க வச்சது மட்டுமில்லாமே