எதுக்காக இப்படி ஓட வைக்கிறீங்க? காதல் இதுக்குள்ளே கசந்துட்டுதா? இளங்கோ ஒங்களத்தான்... ஏன் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கறீங்க?"
இளங்கோ திரும்பிப் பார்த்தான். உறுமிக் கொண்டிருந்த பைக்கை ஆப் செய்து நிறுத்தி விட்டு, அவளையே பேச்சற்றுப் பார்த்தான். அவன் உடலெங்கும் வியர்வைத் துளிகள் வெள்ளமாகிக் கொண்டிருந்தன. அந்த சாலையும், அதன் வாகனங்களும், ஏதோ ஒரு மாய உலகில் போய்க் கொண்டிருப்பது போல தோன்றியது. தலை ஆங்காங்கே அரித்தது. எதிரிகள் நோட்டமிடுகிறார்களோ என்று அங்கேயும் இங்கேயும் பார்த்தபடி முனுசாமி சொன்னதை பாமாவிடம் ஒப்பித்தான்.
அவள் பயந்துவிட்டாள். அவன் பேசப்பேச, முகத்தை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள். அவனை யாருக்கும் பலி கொடுக்கப் போவதில்லை என்பது போல் இடுப்பில் வில் போல் வளைந்த அவன் கைக்குள் தனது கரத்தை சக்கரம் போல் சேர்த்துக் கொண்டாள். அக்கம்பக்கத்தில் சிலர் குளு சிரிப்பாய் பார்ப்பதை அவளும் பார்த்தாள். ஆனால் பொருட்படுத்தவில்லை. அவள் தனக்காக அப்படி அல்லாடுவதில், அவனுக்கும் சுகம் கிடைத்தது. அதே சமயம் "பாமா, பாமா, நீ இப்படி உன் அன்பை வெளிப்படுத்துவதற்காக ஆயிரம் பட்டாக்கத்திகள் என்மீது பாய்ந்தாலும் பரவாயில்லை” என்பதுபோல் கால நேர சூழல் தெரியாமல் மடத்தனமாகப் பேசப்படும் சினிமா 'டைலாக்'கை பேசாமல் அவள், பேசட்டும் என்பது போல், அவளிடம் ஆறுதல் கண்டது போல், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு வார்த்தைகளை மென்று விழுங்கிப் பேசினாள் :
"அந்த ரவுடிப் பசங்களுக்குத் தான் அறிவில்லை, அந்தக் குப்பத்து ரவுடிப் பொண்ணுக்கு வேண்டாம்? நன்றி கெட்ட நாய்." "நாம்தான் அவள் விடுதலைக்குக் காரணமுன்னு அவளுக்குத் தெரியுமோ, என்னமோ?”
"நீங்க உங்க போலீஸ் பிரண்டு திருமலையப்பன்கிட்டே விசயத்தை சொல்லி, அவள்கிட்ட விளக்கமா சொல்லச் சொல்லி இருக்கலாமே.”
"அதுக்காகவே அவரைத் தேடி அலைந்தேன். பதினைந்து நாள் லீவுலே மதுரைக்குப் போய் இருக்காராம்."