"உள்ளே வாங்கண்ணே!"
"இப்போ அதுக்கு நேரமில்லை.”
துரைக்குப் புரிந்துவிட்டது. அண்ணன், கணக்கு வழக்குப் பார்க்க வரல. போலீஸ் ரெய்டப்பத்தி எச்சரிக்கவும் வரல. அப்படி வந்திருந்தா முன்பக்கமாய் வந்திருப்பார். அங்கேயே சோபாசெட்டில் உடம்பைக் கிடத்திக்கொண்டு சாந்தியோடு சிரிப்பும் கும்மாளமுமாய் பேசிக் கொண்டிருப்பார். 'துரை எங்கே' என்று அவளிடம் ஒப்புக்குக்கூட கேட்டிருக்க மாட்டார். அண்ணனின் ரத்தக்கண்களைப் பார்க்கும்போது அவர் 'அதுக்குத்தான்' வந்திருக்கார். துரை எண்ணெயும் நெய்யுமாய் குழைந்தான்.
"அண்ணே, நம்ப ஆட்களுக்கு சொல்லியனுப்பட்டுமா?"
"இதை கேட்டுக்கிட்டா செய்யணும்?”
துரை உள்ளே ஓடிப்போய் ஒரு நாற்காலியை எடுக்கப்போனான். பிறகு இந்த மாதிரி சமயங்களில் அண்ணன், ஒற்றைக்காலில் நின்றாலும் நிற்பாரே தவிர, உட்காரமாட்டார் என்று உள்ளே ஓடினான். ஜன்னல் வழியாக அண்ணனைப் பார்த்த தனது வீட்டுக்காரியை, அவர் கண்ணில் காட்டாமலே உள்ளே இழுத்துப்போனான். வெளியே நின்ற அண்ணனின் கண்களில் அப்போதுதான் சரோசா விழுந்தாள். அன்போடு கேட்டார்.
"என்ன சரோசா டல்லா இருக்கே?"
"அண்ணாத்தே இருந்தும், நானு டல்லாப்போற தலைவிதி வந்துட்டு.”
"நானும் கேள்விப்பட்டேன். இந்த துரை கையில என்ன வளையல் போட்டுகினு இருந்தானா?"
"பூட்டுப்பூட்டு நச்சிட்டாங்கண்ணே. முதுக பென்ட் எடுத்துட்டாங்கண்ணே. இன்னும் தலைய திருப்ப முடியலண்ணே. அண்ணன் இப்படிப் பேரும் புகழுமா இருந்தும் நானு பொம்மனாட்டி