ஒருவரையும் கழுத்தைப் பிடித்து தூக்கியபோது நான்கைந்துபேர் அவர்களை மென்மையாகப் பிடித்துக் கொண்டு வெளியே போனார்கள். வெளியே கோவிந்தன் கூப்பாடு போட்டான். "இன்னாய்யா பொண்டாட்டிகூட இப்படி தொடமாட்டாள்... அப்படி தொடறீங்களே. டச் பண்ணாதய்யா. நீயுமாச்சு உன் சரக்குமாச்சு; ஒரு சொம்பு கண்டக்கஞ்சிக்கி ஒன் ஸ்பெஷலு ஜமாய்க்குமா? இன்னாய்யா ஸ்பெஷலு... பொல்லாத ஸ்பெஷலு.'
வெளியே போட்ட கூப்பாட்டை அண்ணன் சிரித்துக் கொண்டே உள்வாங்கினார். பிழைச்சுப் போகிறான் என்பது மாதிரியான சிரிப்பு. எவரையும் தன்னால் எதுவும் செய்யமுடியும் என்றாலும், அப்படி முடியக்கூடியதை செய்யாமல் இருக்கும் தனது பெருந்தன்மையை வெளிப்படுத்தும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு போனதும், அண்ணன் கிசுகிசுப்பாகப் பேசினார்:
"இன்னிக்கி நைட்ல கரைக்டா ஒருமணிக்கு, நம்ம லாரி தியாகராய நகர்ல ஒரு பங்களாவுக்குப் போகுது. அந்த வீட்டுல இருக்கிறவங்கள நாம வழக்கமா செய்யறது மாதிரி செய்துடணும். நம்ம ஆசிரமத்துக்கு எட்டு மணிக்குள்ள வந்திடுங்க. இந்தா துரை, ஆயிரம் ரூபா... பசங்களுக்கு கேக்கறதயெல்லாம் கொடு... ஏழரைக்கெல்லாம் அவங்கள வழியனுப்பி வைக்கிறதுக்கு நீதான் காரண்டி."
"சரிண்ணே! எந்த பங்களா? என்ன விஷயமாய்?"
“ஒனக்கு சம்பந்தமில்லாத விஷயம்... ஆனாலும் சொல்றேன். அந்தப் பங்களாவை ஒரு சேட்டு இருபது லட்ச ரூபா கொடுத்து வாங்கியிருக்கான். ஆனா அந்த வூட்டுல பத்து வருஷமா வாடகைக்கு இருக்கிற சோமாரி பெரிய ஆபீசராம். காலிபண்ண மாட்டானாம். கோர்ட்டுக்குப் போடான்னு சொல்லிட்டானாம். சேட்டு, என்னையே கோர்ட்டா நினைக்கிறான். காலி பண்ணாதவனை 'காலி' பண்ணாம முடியுமா?"
அனைவரும், அண்ணனை அதிசயித்துப் பார்த்தார்கள். சிலர் விசிலடித்துக் கொண்டார்கள். துரை தவிர மற்றவர்களுக்குக் கொண்டாட்டம். ஆசிரமம் என்று சொல்லப்படும் அனாதரவான இடத்தில், உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் உள்ள ஒரு கல் கட்டிட வீட்டுக்குள் இருக்கும் சைக்கிள் செயின்கள், பட்டாக்கத்திகள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு லாரியில் போகவேண்டும். அண்ணன் காட்டுற பங்களாவில இருக்கிற வங்களை ராத்திரியோட ராத்திரியா தூக்கித்தூக்கி லாரியில போடணும். உயிருக்கு ஆபத்து