Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 15 - சு. சமுத்திரம்
அண்ணனை வழியனுப்பி வைத்துவிட்டு, அந்த நால்வரும், அந்த விடுதிப் பக்கமாக வந்தார்கள். வரிசையாக உள்ள மூன்று விடுதிகளில் முக்கியமான விடுதி அது. அங்கே வகுப்பறை போல் திறந்தவெளியில் நாற்காலி மேசைகள் போடப்பட்டிருந்தன. ஒரு பாட்டிலுக்குள் கொக்கு மூக்கு மாதிரியான ஸ்ட்ராவை வைத்து உறிஞ்சிக்கொண்டிருந்த இளங்கோவை நின்ற இடத்தில் நின்றபடியே “டாய் ஒன்னத்தான், இங்க வாடா” என்றனர்.
விடுதிக்காரர் எதுவும் நடக்காதது போல், முகத்தை முதுகாக்கிக் கொண்டார். அங்கே உட்கார்ந்திருந்த டூரிஸ்ட்கள் அவன் நண்பர்கள் அவனைக் கூப்பிடுவது போல் நினைத்தார்கள். தலைநிமிர்ந்த இளங்கோ, புரிந்துகொண்டான். அதேசமயம் அவர்களிடம் சரோசாவை. தான்தான் மீட்டுக் கொடுத்தது என்று ஆதியோடு அந்தமாகச் சொன்னால், அவர்களை சமாதானப்படுத்த முடியும் என்று நம்பினான். ஆனாலும் உள்ளே ஒரே உதறல். மெல்ல எழுந்து அவர்களை சிநேகிதமாகப் பார்த்துக் கொண்டு அருகே போனான். அங்கே நிறுத்தி வைத்திருந்த தனது பைக்கில் கையைப் போட்டுக்கொண்டே அவர்களிடம் அவன் பேசப் போனபோது, அந்தக் கும்பல் அவனை மல்லாக்கத் தள்ளியது.
இளங்கோ மட்டும் மல்லாக்க விழவில்லை. அவன் ஆதாரமாகப் பற்றிய பைக்கும் அவன்மேல் விழுந்தது. அவன் அந்த வாகனத்திற்குள் அங்குமிங்குமாய் நெளிந்து கொண்டிருந்தபோது, இரண்டு பேர் வந்து பைக்கை அவனோடு சேர்த்துத் தரதரவென்று இழுத்தார்கள். பிறகு அந்த பைக்கைத் தூக்கி வேறுபக்கமாய் தள்ளினார்கள். இரண்டு பேர் பெரிய பெரிய கற்களை எடுத்து அந்த பைக்கின் சக்கரங்களிலும், கண்ணாடிகளிலும் போட்டார்கள். கண்ணாடிச் சிதறல்கள் அங்குமிங்குமாய் துள்ளின. ஒருவன் சக்கரங்களின் டயர்களில் காற்றைப் பிடுங்கிவிட்டான். வேலை இல்லாமல் இருந்த இரண்டுபேர் லேசாய் தலையைத் தூக்கிய இளங்கோவை முடியைப் பிடித்துத் தூக்கினார்கள். ஒருவன் வாயில் குத்துவிட்டான். இன்னொருத்தன் அவன் இடுப்பிலும் காலிலும் உருட்டுக்கட்டையால் அடித்தான். இளங்கோ சுருண்டு விழுந்தான். இரண்டு கண்களுக்கும் இடையே இரண்டு முட்டிக் கைகளையும் வைத்துக்கொண்டு விழித்தான். சத்தம் போட வேண்டும் என்றோ, எதிர்த்து அடிக்க வேண்டும் என்றோ அவனுக்கு எண்ணம் வரவில்லை. தட்டுத்தடுமாறி எழப்போன அவனை மீண்டும் தரையில் ஒரு உதை கொடுத்துக் கிடத்தினார்கள்.
அங்குமிங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தவர்கள், சிறிது தொலைவில் ஒன்று சேர்ந்து