Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 16 - சு. சமுத்திரம்
பூக்கார ருக்குமணி போட்ட கூச்சலில் வரவேற்புக்காரி வசந்தா திடுக்கிட்டு எழுந்தாள். அதற்குள் ஒரு டெலிபோன், அதுவும் காதலனிடமிருந்து. அந்த டெலிபோன் குமிழை ஆசைப்பட்டவனின் முகமாக அனுமானித்துக்கொண்டு அதைக் கன்னத்தில் போட்டுப் புரட்டி சிரிப்பும் சிணுங்கலுமாய் "நீங்க ஒண்ணும் பேச வேண்டாம்" என்று பேசியபடியே மீண்டும் இருக்கையில் உட்கார்ந்தாள். காதல் பேச்சுக்கு முன்னால் எந்தக் கூச்சல் எடுபடும்?
சரோசாவும் மாடிப்படிகளில் தாவிக்குதித்துப் போனாள். கோபமாகப் பார்த்த ருக்குமணியை அவள் கூனிக்குறுகிப் பார்த்தாள். ‘ஏன் இப்படிக் கத்துறேன்னு' திருப்பிக் கேட்க நினைத்தாள். ஆனால் வாய்க்குள் நாக்குப் புரளவில்லை. என்றாலும், ருக்குமணியின் தோளைப் பிடித்துத் தன் பக்கமாக இழுத்தாள். இதற்குள் சத்தம் கேட்டு கீழே வந்த நோஞ்சானிடம் “இது எங்க குடும்ப விவகாரம், முதல்ல இந்தப் பிள்ளாண்டான கவனிண்ணே” என்றாள். சிறிது தயங்கிய அந்த ஆசாமி வாசல்படியில் ரகளை ஏற்பட்டால் வெளியே தெரியும் சிவப்புத் தொப்பிகள் உள்ளே வரலாம் என்று பயந்து, தானும் அந்த ஸ்டெச்சரில் கைகொடுத்து இளங்கோவை மேலே தூக்கிக்கொண்டு போனான். அவனைக் கொல்வதற்கு அப்படி ஒரு சதி நாடகம் நடப்பதாக நினைத்த ருக்குமணி கூப்பாடு போடப்போனாள். இதற்குள் பழமும் தின்று கொட்டையும் போட்ட சரோசா, அவள் வாயைப் பொத்திக் கொண்டு மாடிப்படிகளில் நகர்த்தி அந்தப் படி தட்டிய சமதளத்தில் அவளை நிறுத்தினாள். அவள் பிடியிலிருந்து விடுபட முடியாமல் திணறிய ருக்குமணியை தோளை அழுத்தி, கீழே உட்கார வைத்துவிட்டு இவளும் உட்கார்ந்தாள். அவளைப் பார்த்து கையெடுத்துக்கும்பிட்டுக்கொண்டும், அவள் கத்தப்போனால் வாயை மீண்டும் பொத்துவதற்காக ஒரு கையை அகப்பை மாதிரி வைத்துக்கொண்டும் அவளிடம் மன்றாடினாள்:
"இந்தா பாரும்மா, நானுதான் அந்தப் பிள்ளாண்டான ஆள் வைச்சி அடிச்சேன். அவன் துடிக்கிற துடிப்பப் பார்த்து ரசிக்கணும்னுதான் அந்தப் பக்கமா வந்தேன். நான் நினைச்சிருந்தா ஒரு விசிலடிச்சி என் தோஸ்துகள வரவழைச்சி ஒன்னையும் அவன மாதிரியே செய்திருக்கலாம். செய்யக்கூடியவதான். அப்படியே இல்லாட்டியும் வேன்ல போகறப்போ, கோவில் பக்கமா ஒரு சத்தம் போட்டிருந்தா, என் தோஸ்துங்க வந்து வேனை மறிச்சிருப்பாங்க. இப்பக்கூட எங்கண்ணனுக்கு ஒரு போன் போட்டா, நீ தான் இவன கொன்னேன்னு போலீசுலே ஒன்னையே என்னால உள்ள தள்ளமுடியும். ஆனால், நீ எப்போ இந்தக் குழந்தப் பையன் ‘இந்தப் பாவிக்காக பெரிய அதிகாரிய பார்த்தான்னு சொன்னியோ அப்பவே, நான் மனசு மாறிட்டேன். இந்த