டாக்டர், இப்போது சிரித்து விட்டார். கையில் வைத்திருந்த சிரிஞ்சையும் ஊசியையும் அலாவுதீன் மந்திரம் மாதிரி ஏதோ செய்துவிட்டு, இளங்கோவின் கையில் ஊசி போட்டார். நரம்பு ஊசியோ, சதை ஊசியோ? சுரணையற்றுக் கிடந்தவன், இப்போது வலி தாங்க முடியாமல் அங்குமிங்குமாய் தலையை ஆட்டினான். டாக்டர், வார்டுப் பையன் கொடுத்த பெரிய வட்டக் கண்ணாடி ஒன்றை இளங்கோவின் தலைக்குமேல் படரவிட்டு உற்றுப் பார்த்தார். “அடடே, எவ்வளவு முள்ளுங்க” என்று அவரே சொல்லிக் கொண்டார். பிறகு, எவர்சில்வராய் மினுமினுத்த ஒரு இடுக்கியை தலைக்குள் விட்டு ஒவ்வொரு முள்ளாக எடுத்துப் போட்டார். அந்தச் சமயம், வார்டுப் பையன் (அவன்தான் அங்கே நர்ஸ்) டிஞ்சரையோ அல்லது வேறு எதையோ நனைத்த பஞ்சை வைத்து இளங்கோவின் காயங்களைத் துடைத்து விட்டான். நெற்றிப் பொட்டை “எம்மாடி” என்று சொன்னபடியே பார்த்துவிட்டு, பஞ்சை அதனருகே கொண்டு போனான். இளங்கோ வலி பொறுக்க முடியாமல் கைகால்களை அங்குமிங்குமாய் ஆட்டினான். டாக்டர் அங்கே நின்ற இரண்டு பெண்களையும் பார்த்து, "பணத்தைக் கட்டிட்டிங்களா? அப்படியாவது எனக்கு சம்பளம் வருதான்னு பார்க்கலாம். சரி வெளியில நில்லுங்க" என்று சொல்லி அவர்களை விடாக்கண்டராய் வெளியேற்றிவிட்டு, கதவைத் தாழிட்டார்.
அந்த அறைக்கு வெளியே வந்த சரோசாவிடமும் ருக்குமணியிடமும்'ஸ்பெஷல்' மனிதர் கண்டிப்போடு பேசினான் :
"ஆபத்துக்குத் தோஷமில்லேன்னு சேர்த்துட்டேன். நான் இருந்ததால டிபாசிட் பணம் கட்டாமலே சேர்த்தாச்சு. ஆனால் அப்படி டிஸ்சார்ஜ் செய்ய முடியாது. குறைஞ்சது ஆயிரம் ரூபா கறந்துடுவாங்க. என்ன சொல்றே சரோசா?”
“அந்தக் கவலையே உனக்கு வேண்டாமண்ணே. இன்னும் ஒரு அவர்ல தந்துடறேன். நீ ஸ்பெஷலுக்கு வரப்போ தலையை அடகு வச்சாவது தாறேன். அண்ணன் என்ன உதவாமலா போயிடுவாரு? என்னவோ என் போதாத காலம்."
சரோசா மேற்கொண்டு பேச முடியாமல் அரைகுறை வார்த்தைகளோடு விக்கி நின்றாள். உள்ளே பயங்கரமான சத்தம். ருக்குமணிக்கு, டாக்டர் விஷ ஊசி போடுகிறாரோ என்று இன்னும்கூட சந்தேகம். சரோசாவை முறைத்தாள். ஸ்பெஷல் பேர்வழி விளக்கம் கொடுத்தார் :