பிள்ளாண்டான் கேவலம் ஒரு குப்பத்துக்காரிக்கு - அதுலயும் தன்னையே அடிச்சிப்போட்ட ஒர்த்திக்கி - போலீசுல வாதாடினார்னா அது மனுஷன் செய்யற காரியமில்ல; கடவுளாலதான் அப்படிச் செய்யமுடியும். இது சத்தியமான வார்த்த. முதல்ல அந்தப் பிள்ளாண்டான காப்பாத்தணும். அவரு சரியாகட்டும். அப்புறம் நீ வேணும்னாலும் என்னை செய்துக்கோ. நான் எங்கயும் போகலை. இங்கதான் இருக்கப் போறேன்.”
ருக்குமணி, அவளையே உற்றுப் பார்த்தாள். அவள் சொல்வதில் ஏதோ உண்மை ஒலிப்பதுபோல் இருந்தது. இதற்குள் இளங்கோவை ஒரு அறைக்குள் கொண்டு போவதை, இரு பெண்களும் பார்த்தார்கள். உடனே அங்கே ஓடிப் போனார்கள்.
முதல் மாடியில், முனையில் உள்ள அறை. ஒரு கட்டிலில், ஒரு ஸ்பிரிங் சாய்வுப் பலகையில் அவனை சாய்த்துப் போட்டார்கள். மெத்தை போடப்பட்ட இரும்பு ஸ்பிரிங் கட்டில். பக்கத்திலேயே இருநாற்காலிகள். ஒரு வாஷ்பேஸின். வசதியாகத்தான் இருந்தது.
இளங்கோ மல்லாந்து கிடந்தான். மூக்கில் ரத்தம் கசிந்து அதன் துவாரங்களை அடைத்தது. கண் விழிக்கப் பார்ப்பதுபோல் இமைகள் துடித்தன. சரோசா அவனையே பார்த்தாள். அதைத் தாங்க முடியாததுபோல் சுவரில் முகம் போட்டாள். அந்த மஞ்சள் சுவரில், கண்ணீர் வெண்கோலம் போட்டுக் கீழிறங்கியது. இந்தச் சமயத்தில் நடுத்தர வயது டாக்டர் ஒருவர், கூட வந்த நோஞ்சானைத் திட்டிக்கொண்டே உள்ளே வந்தார் :
"கண்டவனை எல்லாம் உள்ளே கொண்டு வாறியே, உனக்கு பொறுப்பு இருக்கா? ஏம்மா, கவுர்மெண்ட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகாம என் பிராணனை எதுக்கு வாங்கறே? போலீஸ் கேஸ்... போலீஸுக்கு முதல்ல தகவல் கொடுக்கணும்.”
"முதல்ல இவர கவனியுங்க டாக்டர். நான் கீழே போய் டெலிபோன்ல போலீஸுக்கு சேதி செல்லிட்டு வாறேன்.”
“நீ இருக்கியே... நீ எப்போ இங்க சேந்தியோ, அப்பவே, இந்த ஆஸ்பத்திரி உருப்படாமப் போயிட்டு. நர்ஸிங் ஹோம் லாட்ஜா மாறிட்டு. இதுக்கு முன்னாடி தாலுகா ஆபீஸ்ல பியூனா இருந்தியோ?”