Flexi Classics தொடர்கதை - தாழம்பூ - 17 - சு. சமுத்திரம்
நாய்கள் கூடக் குரைக்காத நடு நிசி...
துரையின் சாராயக் கொட்டடிக்குக் கிழக்கே மண்டிக் கிடக்கும் குடிசைப் பகுதி. ஒன்றின் சுவர் இன்னொன்றுக்கு சுவரான தொடர் குடிசைகள். தொடர் தொடராய் சோடி சேர்ந்த குடிசைகளுக்கும், நான்கு கம்பிகள் அகல வாய்ப்பில் செருகப்பட்ட ‘ஜன்னல்கள்’. இந்த குடிசை வரிசைக்கு அங்கேயும் இங்கேயும் தாறுமாறாய் சிதறிக்கிடந்த தகர டப்பாக் குடிசைகள்; கோணிக்கதவுப் பொந்துகள்; ஒன்றோடு ஒன்று நெருக்கித் தள்ளிக் கொண்டிருந்த குடில்கள். இதற்கு மத்தியில் ஒரு பொட்டல் வெளி. அங்கேயும் ஒரு குடிசை இருந்ததுக்கு அடையாளமாக மூங்கில் பட்டைகளும், ஓலைக் கசிவுகளும் சிதறிக்கிடந்தன. அக்கம் பக்கத்து குடிசை மகுடங்களும், அருகே இருந்த ஒரு வாகை மரமும் ஆகாயக் கூரையாக, அந்தப் பொட்டல் ‘தலைமறைவாக' இருந்தது. அதற்கு இருந்த ஒரேயொரு வழியையும் ஒரு அம்பாசிடர் கார் கதவு போல வழிமறித்து நின்றது.
அந்தப் பொட்டல் வெளி புகைந்து கொண்டிருந்தது. ஒரு பெரிய அடுப்பின் மேல் மூன்றடுக்குப் பானைகள் மண்கரகங்கள்போல் அடுக்குடுக்காய் வைக்கப்பட்டிருந்தன. கீழே முதுமக்கள் தாழி மாதிரியான பெரிய பானை. அது கீழே வீசிய நெருப்பில் களிமண்ணே சிவந்து கல்லானது போல் அடிவாரத்தைக் காட்டியது. சென்னைப் புறநகர்ப் பகுதி ஒன்றில் நாட்கணக்கில் முகமூடி வாய்களோடு புதைக்கப்பட்டிருந்த மண் பானைகள், சிறிது தொலைவில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அத்தனையும் கலக்கல்கள். இவற்றில், போன வாரம் இட்டு நிரப்பப்பட்ட வார்னிஷ், சின்னச் சின்ன பாட்டரிகள், ஒயர்கள், அழுகிப் போன பழங்கள், வெல்லம், கருவேலம் பட்டை போன்ற பொருட்கள் இப்போது நீரோடு சேர்ந்து நீர்த்துப் போயிருந்தன. ஒரு டவுசர்காரப் பையன், அந்தப் பானைகளுக்குள், கையில் வைத்திருந்த ஒரு கண்ணாடிக் குப்பியிலிருந்து இரண்டு மூன்று துளிகளைத் தெளித்துக் கொண்டிருந்தான். இப்படி 'போஷாக்கு'ச் செய்யப்பட்ட ஒரு பானைதான், அந்த அடுப்புக்கு மேல் இருந்தது. இதைவிடச் சிறிய ஒரு பானை அதற்குமேல் இருந்தது. சிறியது என்றால் கீழே இருப்பதை விடச் சிறியது; ஆனால் சாதாரணப் பானையைவிடப் பெரியது. இந்தப் பானைக்குள் ஒரு அலுமினியப் பாத்திரம் எப்போதோ வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பானைக்கு வெளியே குழந்தையின் தொப்புள் கொடி போல் ஒரு டியூப்; அந்தப் பானையின் குழாயடி டேப்புக்குள் இருந்து வெளிப்பட்ட இந்த டியூப், வெளியே வைக்கப்பட்ட தார் நிறத்தில் உள்ள ஒரு கேனுக்குள் ஊடுருவி இருந்தது. இந்த நடுப்பானைக்குமேல் இன்னொரு பானை. அதன் வாய் ஒரு மண்