"அப்போ நீ வேடிக்கை பார்த்துட்டு இருந்திருக்கே?"
"சரிதாம்பா, உன்கையாலேயே எனிக்கும் ஒரு கிளாஸ் தந்துடு. அவனைப் போலவே நானும் ஆயிடுறேன். இந்தத் தொழிலு எனக்கு வேணா வேணான்னு சாயங்காலம் வாயிலும் வயித்துலுமா அடிச்சி உன்கிட்ட சொன்னேன்... நீ கேட்டாத்தானே!”
இதற்குள், கீழே கை கால்களை வெட்டிக் கொண்டிருந்தவன் ஆடி அடங்கி விட்டான்; அப்படியே விறைத்துக் கிடந்தான். அவன் வாயோ ‘சொல்லாதே யாரும் கேட்டால்' என்பதுபோல் கோணிக் கிடந்தது. கண்கள் பாடை போல் வெளுத்து இருந்தது. சரோசா முகத்திற்கு கைகளை மூடியாக்கிக்கொண்டு விம்மினாள். துரை இப்பொழுது அவளுக்கு ஆறுதல் சொன்னான்:
"படுகளத்துல ஒப்பாரி கூடாதுமே. இன்னாசி, கோணி கொண்டுவா. பிணத்த தூக்கினு போயி கடலுல போடணும் நானு அண்ணாத்தைக்கு போன்ல விஷயத்தை சொல்லிட்டு வாறேன். எதிர்கோஷ்டி அங்கப்பன், ஆளுங்கட்சியில சேர்ந்த ஜோர்ல, நாம காய்ச்சிற வழக்கமான இடத்துல வம்பு பண்றான்னு இங்க வந்தால், இங்கேயும் இப்படி ஆயிட்டுதே."
சரோசாவுக்கு, இப்போது தன்னை முன்னாலும், பின்னாலும் ருக்குவும், இளங்கோவும் நின்றுகொண்டு ஆளுக்கொரு பக்கமாக இழுப்பது போல் இருந்தது. இப்படிப்பட்ட பல சாவுகளைப் பார்த்தவள்தான் அவள். ஆனால் இன்றோ அந்தப் புது தோஸ்து விறைத்துக் கிடந்ததைப் பார்க்கப் பார்க்க, அவள் மனமே அந்த ரூபத்தில் கிடப்பது போல் இருந்தது. திடீரென்று அவளே செத்து ஆவியாகி பேயுருவம் கொண்டது போல் எழுந்தாள். அந்தக் கார் பக்கம் ஓடினாள். அந்த டிக்கி தொட்டியில் இருந்த கேன்களை எடுத்து, கடல் பக்கமாக ஓடி ஓடி வீசிப் போட்டாள். துரை வந்து, அவளைப் பிடித்துக் கொண்டான். மற்ற தோஸ்துகளும், அந்தப் பிணத்தைக் கோணிக்குள் செருகப்போன இதர தோஸ்துகளும், அங்கே வந்து நின்றபோது, துரை கத்தினான்:
“என்னமே ஆச்சி ஒனக்கு? எதுக்காக கேனை கடல்ல எரியுற?”
சரோசா திருப்பிக் கேட்டாள்: "அப்போ அல்லாரும் இத குடிச்சிட்டு சாகணுங்கறியா?"